/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு துப்புரவு முகாம்: ஆணையர் ஆய்வு
/
சிறப்பு துப்புரவு முகாம்: ஆணையர் ஆய்வு
ADDED : மார் 18, 2025 04:30 AM

திருக்கனுார்,: திருக்கனுார் பகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் நடந்த சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி முழுதும் தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களுக்கு, கடந்த சில மாதங்களாக போதிய ஊதியம் வழங்கப்படாததால், குப்பைகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் தேங்கும் குப்பைகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இயக்குனர் உத்தரவின்பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொம்யூன் துப்புரவு தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை கொண்டு, சிறப்பு துப்புரவு முகாம் மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.திருக்கனுார் பகுதிகளில் நடந்த சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்து, குப்பைகளை விரைந்து அகற்ற துப்புரவு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.