தந்தையிடம் புகார் கூறியதால் மாணவர் தற்கொலை முயற்சி
தந்தையிடம் புகார் கூறியதால் மாணவர் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 16, 2025 03:04 AM
புதுச்சேரி:புதுச்சேரி, கருவடிக்குப்பம் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர், ஹிந்தி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது.
இதுகுறித்து, மாணவரின் தந்தையை போனில் தொடர்பு கொண்டு, வகுப்பு ஆசிரியர் தகவல் தெரிவித்து, பள்ளிக்கு வருமாறு கூறினார்.
இதனால், மனமுடைந்த மாணவர், சக மாணவர்களிடம் 2வது மாடியில் இருந்து குதித்தால், இறந்து விடுவேனா என கேட்டதாக கூறப்படுகிறது.
பின், மதியம் 12:20 மணிக்கு பள்ளியின் 2வது மாடியில் உள்ள வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவர், திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். பள்ளியின் மெயின் நுழைவாயில் எதிரே மைதானத்தில் விழுந்த மாணவர் பலத்த காயமடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவலறிந்த லாஸ்பேட்டை எஸ்.ஐ., சம்பவ இடத்தை பார்வையிட்டு, மாணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரிக்கிறார்.
