/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
/
பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
ADDED : ஆக 19, 2025 07:33 AM

திருபுவனை : திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பத்திற்கு பஸ்கள் சரிவர இயக்காததை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு அடுத்து 6 கி.மீ., துாரத்தில் சன்னியாசிக்குப்பம்கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு புதுச்சேரியில் இருந்து வில்லியனுார், கண்டமங்கலம், திருபுவனை, மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் வழியாக 9 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டிற்கு முன் விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணி தொடங்கியதும் 4 பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 5 பஸ்களும் தொடர்ந்து இயக்காமல், காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், சன்னியாசிகுப்பம், இந்திரா நகர், சகடப்பட்டு மற்றும் தமிழக பகுதியான சேஷாங்கனுர் கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று காலை சன்னியாசிகுப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட தயாராக இருந்த தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சன்னியாசிக்குப்பத்திற்கு 9 பஸ்களும் தடையின்றி இயக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.தகவலறிந்த திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.