நிழல் இல்லா நாள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
நிழல் இல்லா நாள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 22, 2026 07:32 PM
புதுச்சேரி: நிழல் இல்லா நாள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சூரியன் சரியாக உச்சந்தலைக்கு மேல் 90 டிகிரி செங்குத்தாக வரும்போது, செங்குத்தாக நிற்கும் பொருட்கள் மற்றும் மனிதர்களின் நிழல் சிறிது நேரத்திற்குத் தற்காலிகமாக மறையும் அல்லது தெரியாமல் போகும் ஒரு அரிய அறிவியல் நிகழ்வு தான் நிழல் இல்லா நாள்.
புதுச்சேரி இருதய ஆண்டவர் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நிழல் இந்த இல்லா நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு நிழல் இல்லா நாளின் சிறப்பு அம்சங்கள் குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. வட்டமாக நின்ற மாணவர்கள் நிழல் இல்லா நாள் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். தங்களுடைய நிழல் விழாததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். செங்குத்து குச்சிகளின் நிழல் நீளத்தைக் கவனித்தல், பூமியின் அட்சரேகையைக் கணக்கிடுதல், சூரியனின் சரிவுக் கோணத்தைக் கண்டறிதல் போன்ற சுவாரசியமான அறிவியல் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
பூமி 23.45 டிகிரி சாய்ந்து சூரியனைச் சுற்றி வருவதால் தான் பருவ காலங்கள் உருவாகின்றன என்பது குறித்தும், வானியல் சார்ந்த மூடநம்பிக்கைகளுக்கான உண்மைப் பின்னணி விளக்கப்பட்டன். அறிவியல் இயக்க நிர்வாகிகள் கூறுகையில், சூரியன் சரியாகத் தலைக்கு மேலே வரும் நாளில், செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள எந்தவொரு பொருளின் நிழலும் தரையில் பக்கவாட்டில் விழாமல், அப்பொருளின் அடிப்பகுதியிலேயே மறைந்துவிடும். இதுவே நிழல் இல்லா நாள். பூமியின் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில், ஆண்டில் இரண்டு முறை மட்டுமே இந்த நிகழ்வு சாத்தியமாகும். புதுச்சேரி பகுதியில் வடக்கை நோக்கிய நகர்வில் ஏப்ரல் 21 அன்றும், தெற்கை நோக்கிய நகர்வில் ஆகஸ்ட் 22 அன்றும் நிழல் இல்லா நாள் ஏற்படுகிறது. இந்த இரண்டாவது நிகழ்வு தான் இப்போது செயல் விளக்கம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றனர்.
இதனை புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மாநில பயிற்சி மையம், புதுச்சேரி அறிவியல் இயக்கம், பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், இருதய ஆண்டவர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஒருங்கிணைந்தன.
