தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஓடும் பஸ்சில் ஓவியப் போட்டி
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஓடும் பஸ்சில் ஓவியப் போட்டி
ADDED : செப் 10, 2026 05:22 PM
புதுச்சேரி: புதுச்சேரி உளவியல் சங்கம், டெலி மானஸ், தனியார் இன்டர்நேஷனல் பள்ளி, ரோட்டரி சங்கம் பாண்டிச்சேரி பீச் டவுன் சார்பில், உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, ஓடும் பஸ்சில் விழிப்புணர்வு ஓவியப் போட்டி பாண்டி மெரினாவில் நடந்தது.
மாணவர்களின் கற்பனை திறன் மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி தற்கொலைத் தடுப்பு, மனநலம், நம்பிக்கை, வாழ்க்கையின் மதிப்பு மற்றும் உதவி கேட்பதன் அவசியம் போன்ற முக்கியமான கருத்துகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
இதில், புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 150 பேர் பங்கேற்று, ஓடும் பஸ்சில் தங்களது ஓவியங்களை வரைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவமனை டாக்டர் மதன், டெலி மானஸ் டாக்டர் கஜலட்சுமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழாவில், சிறந்த 10 பேருக்கு மனநலத் துாதுவர் விருது, 3 பேருக்கு ஹோப் பில்டர்ஸ் விருது வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் புருஷோத்தமன், தேவராஜ் மகாதேவன், உளவியலாளர் ராஜா, அருண் பிரவின், உமா மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
