/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பத்தில் படகு சவாரி நிறுத்தம்; சுற்றுலாத்துறைக்கு வருவாய் இழப்பு
/
நோணாங்குப்பத்தில் படகு சவாரி நிறுத்தம்; சுற்றுலாத்துறைக்கு வருவாய் இழப்பு
நோணாங்குப்பத்தில் படகு சவாரி நிறுத்தம்; சுற்றுலாத்துறைக்கு வருவாய் இழப்பு
நோணாங்குப்பத்தில் படகு சவாரி நிறுத்தம்; சுற்றுலாத்துறைக்கு வருவாய் இழப்பு
ADDED : மே 03, 2025 10:35 PM
சுற்றுலா நகரமான புதுச்சேரியின் அடையாளங்களி்ல ஒன்றாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் முதல் சாய்ஸ் ஆக இருப்பதும் நோணாங்குப்பம் படகு குழாம்தான்.
காரணம், சுண்ணாம்பாற்றில் 20 நிமிடங்கள் பயணித்து பேரடைஸ் பீச்சிற்கு செல்லலாம். அங்கு நாள் முழுவதும் தங்கி, ஜாலியாக ஆடிப்பாடி மகிழ்ந்து மாலை மீண்டும் படகில் பயணித்து நோணாங்குப்பம் படகு குழாமிற்கு திரும்புவது புதுவித அனுபவமாக இருப்பதோடு, மனதும் புத்துணர்வு பெறும்.
இதன் காரணமாகவே புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், படகு குழாம் பயணத்தை மிஸ் பண்ணுவதில்லை.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வீசிய பெஞ்சல் புயல், அதனைத் தொடர்ந்து சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், நோணாங்குப்பம் படகு குழாம் அமைந்துள்ள சுண்ணாம்பாற்றில், கடற்கரையையொட்டி முகத்துவாரம் பகுதியில் ஆங்காங்கே மணல் குன்றுகள் உருவாகியுள்ளது.
இதனால், படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு படகுகள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால், படகு குழாம் நிர்வாகம், படகு குழாமில் இருந்து சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் சென்று மணல் திட்டில் இறக்கி விடுவர்.
அந்த மணல் திட்டை சுற்றுலா பயணிகள் நடந்து சென்று மறுகரை அருகே சென்றதும் அங்கிருந்து மற்றொரு படகு மூலம் பேரடைஸ் பீச்சிற்கு அழைத்து செல்லப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் மணல் திட்டில் நடந்து செல்வது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
மேலும், கோடை வெயில் காரணமாக சுண்ணாம்பாற்றில் நீர் மட்டம் குறைந்து வருவதால், படகுகளை மணல் திட்டு பகுதிக்கு இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.
இதனால், படகு குழாம் நிர்வாகம் கடந்த வாரம் முதல் பாரடைஸ் பீச்சிற்கு படகு போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. பெயரளவிற்கு, 'லாங் ரைடு' என்ற பெயரில் நோணாங்குப்பத்தில் இருந்து மணல் திட்டுவரை சென்று மீண்டும் படகு குழாமிற்கு திரும்பி விடுகின்றனர். பீச்சில் நாள் முழுதும் பொழுது போக்க முடியாததால், 'லாங் ரைடு' படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், படகு குழாமிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால், சுற்றுலா துறைக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பு சராசரியாக தினசரி ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சமும், வார விடுமுறை நாட்களில் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் வரும். ஆனால், படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால், தினசரி வருவாய் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
சுற்றுலா துறைக்கு கணிசமான வருவாய் ஈட்டி தரும் படகு சாவரியை தொடர்ந்திட, சுண்ணாம்பாற்றில் ஏற்பட்டுள்ள மணல் திட்டை அகற்றி, தடையற்ற படகு சவாரிக்கு அரசும், சுற்றுலா துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.