ADDED : மார் 02, 2026 03:54 AM

புதுச்சேரி: வைத்திக்குப்பத்தில் மாசிமக கடற்கரை தீர்த்தவாரியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி நடந்தது.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி, வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை (3ம் தேதி) நடப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில், சுவாமி தரிசனத்திற்கான பந்தல் அமைத்தல், கடற்கரைக்கு இறங்கி செல்வதற்கு வசதியாக பாறைகள் சரி செய்தல், தடுப்பு வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட பணி நடந்து வருகிறது.
தீர்த்தவாரியில் மயிலம் முருகர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் சீனிவாச பெருமாள், புதுச்சேரி மணக்குள விநாயகர், மேல் மலையனுார் அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் பங்கேற்று அருள்பாலிக்கின்றனர்.
இதேபோல் வில்லியனுார் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கங்கவராக நதீஸ்வரர், காசிவிசுவநாதர் கோவில், காலாப்பட்டு, பாகூர் தென்பெண்ணையாற்றங்கரை பகுதிகளிலும் தீர்த்தவாரி இன்று (2ம் தேதி)நடக்கிறது.
