/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தரின் சிந்தனையை செயல்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணி: பிரோஷபகுமார்
/
விவேகானந்தரின் சிந்தனையை செயல்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணி: பிரோஷபகுமார்
விவேகானந்தரின் சிந்தனையை செயல்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணி: பிரோஷபகுமார்
விவேகானந்தரின் சிந்தனையை செயல்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணி: பிரோஷபகுமார்
ADDED : ஜன 27, 2026 04:41 AM

புதுச்சேரி: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் 100ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அம்பேத்கர் மற்றும் விவேகானந்தர் சிந்தனைகளை முன்னிறுத்தி புதுச்சேரியில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
ஜவகர் நகர் உழவர்கரை நகராட்சி, இ.சி.ஆர்., கொக்கு பார்க், முத்தியால்பேட்டை மணிகூண்டு மற்றும் முதலியார்பேட்டை பாரதி மில் ஆகிய நான்கு திசைகளில் இருந்து நேற்று மாலை 4:00 மணிக்கு அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டது.
அணிவகுப்பு ஊர்வலத்திற்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் மலர் துாவி வரவேற்றனர். ஊர்வலங்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா திடலை சென்றடைந்தன.
அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. தொழிலதிபர் நவீன்பாலாஜி தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் புதுச்சேரி மாவட்ட செயலாளர் செந்தில் விஸ்வநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பின் வடதமிழக மாநில அமைப்பாளர் பிரோஷபகுமார் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு 100 ஆண்டுகளை கடந்து வந்த பாதை வலி மிகுந்தது. தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக கொண்டது. இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு அரும்பணி ஆற்றி வருகிறது.
அம்பேத்கருக்கும், ஆர்.எஸ்.எஸ்.,க்கும் நீண்ட நெடிய உறவு உள்ளது. அம்பேத்கரின் கனவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் லட்சியமும் ஒன்று. விவேகானந்தர் துடிப்பு மிக்க, நல்லொழுக்கம் நிறைந்த, சுயநலமற்ற இளைஞர்களை உருவாக்குவது, வலிமையான பாரதத்தை உருவாக்குவது என்பதே அவரது சிந்தனை. விவேகானந்தரின் சிந்தனைக்கு செயலாக்கம் கொடுத்து வருவதுதான் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அடிப்படை பணி.
மேலும், 100ம் ஆண்டு சிறப்பு செய்தியாக ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்கான ஐந்து வாழ்வியல் ஒழுக்க கோட்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவது. பல ஆண்டுகளாக முன்னோர்கள் பின்பற்றிய இந்து குடும்ப வாழ்வியல் முறையை மீண்டும் உருவாக்குவது. பழந்தமிழர்களின் இயற்கையோடு இழையோடிய சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு. உண்ணும் உணவிலும், உடுக்கும் உடையிலும் மட்டுமல்லாது நம் அன்றாட வாழ்வியல் முறையிலும் சுதேசிய பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது. குடிமகனின் அடிப்படை கடைமைகளை கடைபிடிப்பதே ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில், அமைச்சர் நமச் சிவாயம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், சாய்சரவணன் குமார், செல்வம், தீப்பாய்ந்தான், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வட தமிழக மாநில தலைவர் குமாரசாமி. இணைத்தலைவர் செல்வராஜ், புதுச்சேரி கோட்டத் தலைவர் மணி வண்ணன், மாவட்ட தலைவர் அரவிந்தன், நகர தலைவர் தாமோதரன், ஒன்றிய தலைவர்கள் பாகூர் ராதா, திருக்கனுார் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

