/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனதை சரியான பாதையில் அழைத்து செல்லும் ரகசியம்: இந்து தர்மத்திற்கு மட்டுமே தெரியும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
மனதை சரியான பாதையில் அழைத்து செல்லும் ரகசியம்: இந்து தர்மத்திற்கு மட்டுமே தெரியும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
மனதை சரியான பாதையில் அழைத்து செல்லும் ரகசியம்: இந்து தர்மத்திற்கு மட்டுமே தெரியும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
மனதை சரியான பாதையில் அழைத்து செல்லும் ரகசியம்: இந்து தர்மத்திற்கு மட்டுமே தெரியும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 01, 2026 05:43 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவத்தில், நேற்றைய 16ம் நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்:
திருப்பாவையின் 16வது பாசுரத்தில் மணிக்கதவம் தாள் திறவாய் - துாயோமாய் வந்தோம் என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.
நாம் அனைவருமே பிறவி எடுத்தோம்; அப்படிப்பட்ட இந்தப் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் பிறந்தும் இறந்தும் பிறவிகள் பல எடுத்து உழல்கின்ற நம்முள், தன்னை உணர்ந்த மேன்மக்கள் மட்டுமே பிறவியை அறுக்க விழைகிறார்கள். முக்தி நிலையை அடைய அவன் சரண் அடைவதன்றி நமக்குச் சரண் வேறில்லை என்பதை ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் சொல்கிறாள்.
சனாதன தர்மமான நம் இந்து தர்மத்தின் மிகப்பெரிய பலமே பக்திதானே. பக்தியே மனித வாழ்வின் தலையாய கடமை. பக்தி என்பது பகவானிடத்தில் வைக்கக்கூடிய உன்னதமான அன்பேயாகும். யார் வேண்டுமானாலும் பகவானிடத்தில் பக்தி செய்யமுடியும். பக்தி செய்வதற்கு மனம் தான் வேண்டும். மனித மனமே வாழ்வை நிர்ணயம் செய்கிறது.
உலகில் விலை நிர்ணயம் பண்ணமுடியாத ஒரு பொருள் மனித மனமே. மனதை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் ரகசியம் இந்து தர்மத்திற்கு மட்டுமே தெரியும்.
காமம், கோபம், சுயநலம் என்கின்ற மூன்று திருடர்கள் நம்முடைய ஞானம் என்னும் ரத்தினத்தை அபகரிக்கின்றார்கள். ஆதலால் எப்பொழுதும் இந்த மூன்று திருடர்களிடமும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அதனால் ஞானத்தை யாரும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தன்னிடத்திலிருக்கும் ஆசை, கோபம், சுயநலம் ஆகியவற்றை கொன்றொழித்தாலே போதும்.
ஆசை, கோபம், சுயநலம் ஆகியவை அசுர குணங்கள். இந்த அசுரர்களை வதம் செய்தாலே நிம்மதி பிறக்கும். ஜாதி, மதம், மொழி, இனம், பணம், அந்தஸ்து, வயது, படிப்பு, ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்று அனைத்தையும் கடந்து, எல்லோராலும் செய்ய முடிந்த ஒரு காரியம் சரணாகதி மட்டுமே.
ஆக வே, நல்லதை வாசித்து, தேவைகளை யோசித்து, உணர்வுகளை சுவாசித்து கனவுகளை யாசித்து, கண்ணனின் நினைவுகளை நேசித்து வாழும் வாழ்கை என்றும் இனிக்கும்.
இவ்வாறு உபன்யாசம் செய்தார்.

