மாமூல் கேட்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வணிகர் கூட்டமைப்பு கடும் கண்டனம்
மாமூல் கேட்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வணிகர் கூட்டமைப்பு கடும் கண்டனம்
ADDED : ஆக 14, 2026 05:32 PM
புதுச்சேரி: வியாபாரிகள் அச்சமின்றி தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் பாபு அறிக்கை;
வில்லியனுாரில் மாமூல் கேட்டு, அரிசி கடையின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அச்சுறுத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த சம்பவம், வியாபாரிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் மாமூல் வசூல், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். வணிகர்கள், வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் அச்சமின்றி தொழிலை நடத்துவதற்கு முழுமையான பாதுகாப்பை புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும். மாமூல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான புகார்களை வணிகர்கள் தயக்கமின்றி தெரிவிக்கக்கூடிய வகையில் காவல்துறை சார்பில் தனிப்பட்ட புகார் மற்றும் உதவி ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
