த.வெ.க., விஜய் வேனில் பிரசாரம் நிபந்தனைகளுடன் அனுமதி
த.வெ.க., விஜய் வேனில் பிரசாரம் நிபந்தனைகளுடன் அனுமதி
ADDED : ஏப் 03, 2026 05:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (ஏப். 4) பிரசாரம் மேற்கொள்ள போலீஸ்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.
த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜய் பிரசாரம் செய்ய முதலில் ஏப்., 5ம் தேதி, 23 இடங்களில் அனுமதி கோரப்பட்டிருந்தது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஆகியோர் புதுச்சேரிக்கு வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு நாள் முன்னதாக ஏப்., 4ம் தேதி பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 23 இடங்களுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு, வில்லியனுார் - கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டுமே வேனில் நின்று பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது:
பிரசாரத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். தமிழக ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வரக்கூடாது. ஒவ்வொரு இடத்திலும் அதிகபட்சம் 2,000 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. காலை 9:30 மணிக்குத் துவங்கி, மதியம் 1:30 மணிக்குள் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னை கிளம்ப வேண்டும். பிரசார இடங்களில் குடிநீர், பிஸ்கட் மற்றும் 5 ஆம்புலன்ஸ் வசதிகள் கட்டாயம் செய்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் மட்டுமே வேன் மீது ஏற வேண்டும். தொண்டர்கள் யாரும் பிரசார வேனைப் பின் தொடரக் கூடாது. உட்பட 11 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.
