ADDED : ஜன 22, 2025 04:50 AM
பாகூர் : பஸ் மீதுலாரி மோதிய விபத்தில், டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் இருந்து நேற்று காலை பி.ஆர்.டி.சி., பஸ் மடுகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதேபோல், தனியார் பஸ் ஒன்று பனித்திட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இரண்டு பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக நோணாங்குப்பம் பஸ் நிறுதத்தில் நின்றபடி பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது.
அப்போது, பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ் மீது மோதியது. இதனால் தனியார் பஸ்,எதிரே நின்றிருந்த அரசு பஸ் மீது மோதியது. இந்த தொடர் விபத்தில், தனியார் பஸ் டிரைவர் காராமணிக்குப்பத்தை சேர்ந்த வடிவேல் 31; அதில் பயணம் செய்த அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவக்குமார், 36; அருள்செல்வி, 34; உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்கள் உதவியுடன், காயமடைந்தவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
