ADDED : மே 21, 2026 06:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் செடல் உற்சவம் கடந்த 14ம் தேதி ஐயனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது. இதையொட்டி முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, சிவன்- பார்வதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, வித்தியாசமான முறையில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் மூலம் நேரடியாக கிடைக்கக்கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சம், கொய்யாக்காய், நெல்கதிர், பன (நுங்கு), வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளிக்காய், ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, சிவன் பார்வதிக்கு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாம்பு நடனத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
