ADDED : பிப் 11, 2026 04:42 AM

புதுச்சேரி: வரும் சட்டசபை தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்கள் கட்சி மாறி அல்லது சுயேச்சையாகவோ போட்டியிட தயாராகி வருகின்றனர்.
புதுச்சேரி வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில் கடந்த தேர்தலில் 6 சுயேச்சைகள் வெற்றி பெற்று பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்தனர்.
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இண்டி கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தங்கள் விரும்பும் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், போட்டியிட்ட என்.ஆர்.காங்.,10; பா.ஜ.,6 மற்றும் இண்டி கூட்டணியில் காங்., 2, தி.மு.க.,6, சுயேட்சைகள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இதில், தற்போது அனைத்து பிரதான கட்சியில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. உதாரணத்திற்கு காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜான் குமார் முதலியார்பேட்டை தொகுதியை குறிவைத்து பொருட்கள் வழங்கி வருகிறார். ஊசுடு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் திருபுவனைத் தொகுதியில் தனது மனைவி மூலம் பொருட்களை வழங்கி வருகிறார். இது மட்டுமின்றி சிட்டிங்கில் இல்லாமல் உள்ள சில தொகுதிகளில் கூட்டணி கட்சி போட்டியிட்ட இடங்களை இந்த முறை கைப்பற்ற கடும் போட்டி நடந்து வருகிறது.
அதில், கடந்த முறை தி.மு.க., போட்டியிட்ட நெல்லித்தோப்பில் நாராயணசாமி, காலாப்பட்டில் ஷாஜகான், மண்ணாடிப்பட்டில் செல்வம், வி.சி.கட்சி நின்ற உழவர்கரையில் காங்., பாலன், என்.ஆர். காங்., அமைச்சர் லட்சுமி நாராயணன் வெற்றி பெற்ற ராஜ்பவனில், பா.ஜ., தலைவர் ராமலிங்கம், பா.ஜ., போட்டியிட்ட லாஸ்பேட்டையில் என்.ஆர்.காங்., சிவக்கொழுந்து, கம்யூ., போட்டியிட்ட தட்டாஞ்சாவடியில் தி.மு.க., நித்தீஷ், காங்., போட்டியிட்ட முத்தியால்பேட்டையில் தி.மு.க., பிரபாகரன், நந்தா சரவணன் போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை வழங்கி, ஓட்டு கேட்டு வருகின்றனர்.
இதனால் அனைத்துக் கட்சி கூட்டணியிலும் தொகுதி பங்கிட்டு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் சீட்டு கிடைக்காதவர்கள், கடைசி நேரத்தில் மாற்றுக் கட்சிக்கு தாவலாம் அல்லது சுயேச்சையாக நிற்கலாம் என்ற நிலைப்பாடு புதுச்சேரியில் நிலவி வருகிறது.

