/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேட்பாளர் யார்?:இழுபறி நீடிப்பு!
/
வேட்பாளர் யார்?:இழுபறி நீடிப்பு!
ADDED : பிப் 17, 2024 11:37 PM
புதுச்சேரி தொகுதியில், என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியிடுவதற்கு கூட்டணி கட்சியான என்.ஆர். காங்., பச்சைக் கொடி காட்டி விட்டது. அதுபோல, காங்., - தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சி களம் இறங்குவதற்கு தி.மு.க., 'ஓகே' செய்து விட்டது.
கூட்டணி கட்சி ஒப்புதல் அளித்தபோதும், வேட்பாளர் தேர்வில் இரு பிரதான கூட்டணியிலும் இழுபறி நீடிக்கிறது.
காங்., கூட்டணியில் தற்போதைய எம்.பி.,யான வைத்திலிங்கத்தை வேட்பாளராக நிறுத்துவதற்கு அக்கட்சி தலைமை முடிவு செய்து விட்டது. ஆனால், மீண்டும் உள்ளூர் அரசியலுக்கு திரும்ப வைத்திலிங்கம் விரும்புகிறார்.
இதற்காக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் உள்ளிட்டோரை வேட்பாளராக்க பெயர்கள் கசிய விடப்பட்டுள்ளது. வேறு சிலரும் சீட் கேட்கின்றனர்.
இருந்தபோதும், கட்சி தலைமை உத்தரவிடும் பட்சத்தில் களம் இறங்குவதற்கு வைத்திலிங்கம் தயாராகவே உள்ளார்.
இன்னொரு பக்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக நிறுத்துவதற்கு பா.ஜ., தலைமை விரும்புகிறது. ஆனால், தேசிய அரசியலுக்கு செல்வதற்கு நமச்சிவாயத்திற்கு விருப்பம் இல்லை. இதன் காரணமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனில் ஆரம்பித்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வரை பலரது பெயர்கள் பா.ஜ., வேட்பாளராக நிறுத்தப்படுவர் என உலா வருகிறது.
குறிப்பாக, நியமன எம்.எல்.ஏ.,வாக உள்ள ராமலிங்கம், காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் உள்ளிட்ட பெயர்களும் பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இரு பிரதான கூட்டணியிலும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் இறுக்கமான சூழல் நிலவுகிறது. வேட்பாளரை தாமதமின்றி அறிவித்தால், தேர்தல் பணிகளை புயல் வேகத்தில் துவக்க முடியும் என நிர்வாகிகள் விரும்புகின்றனர்.