உலக சுகாதார அமைப்பு பிரதிநிதிகள் காசநோய் ஒழிப்பு பிரசாரம், கலந்துரையாடல்
உலக சுகாதார அமைப்பு பிரதிநிதிகள் காசநோய் ஒழிப்பு பிரசாரம், கலந்துரையாடல்
ADDED : ஜன 22, 2025 08:55 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் காசநோய் பிரசாரம் குறித்து, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
புதுச்சேரியில் உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆப்ரின், தேசிய திட்ட அலுவலர் ரஞ்சனி ஆகியோர் சுகாதார இயக்குநர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் கோவிந்தராஜன், காசநோய் அதிகாரி சந்திரசேகரன், உலக சுகாதார நிறுவன கள ஆலோசகர் மினிட்டா ஆகியோரை சந்தித்தனர்.
அப்போது காசநோயை ஒழிப்பதற்கான முதன்மை திட்டமான, 100 நாள் காசநோய் பிரசாரம் மற்றும் முக்கிய பொது சுகாதார திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
இதையடுத்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அருங்காட்சியகத்திற்கு சென்றனர்.
மருத்துவமனை இயக்குநர் உதயசங்கர், சமூக மருத்துவ துறை தலைவர் கவிதா, மாநில ஆலோசகர் சூரிய குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் புகையிலை பயன்பாடு மற்றும் போதைப்பொருட்களால் பாதகமான உடல் நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட மாதிரிகளை பார்வையிட்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு போதை பற்றிய தீமைகளை எடுத்துரைப்பதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் அருங்காட்சியகம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினர்.
மேலும் 100 நாள் காசநோய் பிரசாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஆரம்ப நிலையில் கண்டறிதல், தொடர் சிகிச்சை எடுத்தல் மற்றும் சமூக ஈடுபாட்டை உண்டாக்குவதின் மூலம் காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கலாம் என, விளக்கினர்.
