ADDED : ஏப் 19, 2026 04:36 AM
சட்டசபை தேர்தலில் மங்கலம் தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் முதல்வர் ரங்கசாமியும், தி.மு.க., சார்பில் ரங்கன், காங்., சார்பில் ரகுபதி, உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டதால் மாநிலமே திரும்பி பார்க்கும் வகையில் மங்கலம் தொகுதி முக்கியத்துவம் பெற்றது.
என்.ஆர்.,காங்., சார்பில் பஞ்சாயத்திற்கு ஒரு பொறுப்பாளர் என 9 பஞ்சாயத்திற்கும் 9 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் முதல்வர் ரங்கசாமி வருகையின் போது மட்டுமே, தொகுதியில் வேலை செய்வது போன்று பாவ்லா காட்டினரே தவிர, மக்களை சந்தித்து முதல்வரின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு கேட்கவில்லை. மேலும் கொடுக்கப்பட்ட நிதியையும், முறையாக வாக்காளரிடம் கொண்டு சேர்க்கவில்லை. இதனால், என்.ஆர்.காங்., கட்சிக்கு ஓட்டுகள் விழுந்ததா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தி.மு.க., வேட்பாளர் ரங்கன், துவக்கம் முதலே தொகுதியில் ஒற்றை ஆளாக களத்தில் இறங்கி வேலையை துவக்கி, படிப்படியாக ஒவ்வொரு பகுதியிலும் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கினார்.
அவரைத் தொடர்ந்து கடைசி 2 நாளில் களமிறங்கிய அவரது மகள் பம்பரமாக தொகுதியை வலம் வந்து வாக்காளர்கள், நடுநிலையாளர்கள், மாற்றுக் கட்சியினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை 'முறையாக கவனித்து', தன் வசப்படுத்தி 'சைலண்டாக' ஓட்டுகளை பெற்றுள்ளார்.
மங்கலம் தொகுதியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டி, முயல்-ஆமை கதையாக மாறி உள்ளது.
இதனால் மங்கலம் தொகுதியில் முதல்வர் மகுடம் சூடுவார என்ற கேள்வி மக்கள் மத்தியில் பேச்சு பொருளாக மாறி உள்ளது.
