தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல்வருக்கு விதவையின் திறந்த மடல்...

 முதல்வருக்கு விதவையின் திறந்த மடல்...

 முதல்வருக்கு விதவையின் திறந்த மடல்...


ADDED : டிச 14, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல்வருக்கு விதவையின் திறந்த மடல்....

முதல்வரே… என் வாழ்க்கையின் கதவைத் திறந்தால், அங்க முதலில் தெரியும் காட்சி தனிமை. ஒரு காலத்திலே என் பக்கத்தில் நின்ற கணவன், இப்போ ஒரு புகைப்படத்திலே தான் என்கிட்ட பேசுறான்.அந்தப் படத்துக்கு முன் தினமும், நான் சிந்தும் கண்ணீர் தான் காணிக்கையாக வைக்கிறேன். அவன் போன நாளிலிருந்து குடும்பத்தில், காற்றின் வாசனை மாறிச்சு, நான் என்னையே மறந்து போன மாதிரி வாழ்க்கையே இருண்டு போச்சு..

முதல்வரே. ....ஒரு பெண்ணுக்கு கணவன் துணையில்லாம போனால்... உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. உலகமே உடைந்து போச்சு என்பதுதான் உண்மை.. இந்த தனிமைக்குள் இப்போது வறுமை வந்து என் தோளில் அமருகிறது. மாசம் சம்பாதிக்கும் 10 ஆயிரம் ரூபாயும் போதவில்லை. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை, காய்கறி விலை, மளிகை விலை எல்லாமே என்கிட்ட நீ எப்படி வாழப்போற என்று கேள்வி கேக்குது.

ஒரு சிலிண்டரின் விலை கேட்டாலே என் இதய துடிப்பு கூட உயருது. காய்கறி வாங்கும்போது வியாபாரியின் குரலை விட என் மனசின் அதிர்ச்சி சத்தம் அதிகம் கேட்குது. மளிகைக் கடையில் ஒரு பொருள் எடுத்து, ரொம்ப நேரம் அப்படியே என் கையில தாங்கிப்பாத்து, வாங்கலாமா… வேண்டாமா… என்று போராடுறேன். என் பசியோடு என் வருமானம் தினமும் சண்டை போட்டுக்கொண்டிருக்கு.

என் குழந்தைகள் கேட்ட சிறிய ஆசைகளுக்கே நான் தருகிற பதில் புன்னகை. ஆனா அந்த புன்னகை பின்னாடி எத்தனை ஆயிரம் காயங்கள்... முதல்வரே... கணவன் இருந்திருந்தா இந்த உலகம் எவ்வளவு கொடுமையா இருந்தாலும் என், பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த ஒரு தோள் என்னை காப்பாத்தி இருப்பான்.

இப்போ அந்த தோள் இல்லாம நொறுங்கி போய் இருக்கேன்.. என் உள்ளத்தின் எடை கூட இப்போது தாங்க முடியல என்னால.

இப்ப கிடைக்குற அரசு தருகிற 2,000 ரூபாய் உதவி ஒரு பசிக்குள்ள குழந்தைக்கு சிறிய கசாயம் கிடைப்பது மாதிரி இருக்கு. உயிரை காப்பாத்துது… ஆனா முழுசா காக்க முடியல. முதல்வரே… இந்த வறுமையும், தனிமையும் சேர்ந்து எங்களை தினமும் சுருக்கிக்கிட்டு வருது. ஆனா நாங்க விதவைகள்..

கண்ணீரை துடைத்துகிட்டு உள்ளுக்குள் உடைந்துகிட்டு வெளியில் வலிமை போல நடிக்குறோம். நீங்க 21 முதல் 55 வயது பெண்களுக்கு உதவித் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாய் உயர்த்தினீங்கன்னு கேட்ட அதே நேரம் எங்க உள்ளத்திலும் ஒரு சிறிய ஒளி கிளம்பிச்சு.

அந்த ஒளி எங்களையும் வந்தடையுமா என்று நாங்க தினமும் எதிர்பார்க்குறோம். எங்களுக்கும் 2, 500 ரூபாயாவது உயர்த்தி கொடுத்தீங்கன்னா…கோடி புண்ணியம் உங்களுக்கு...

அது ஒரு காசு மட்டும் இல்லை.. உங்களுக்கு நாங்க இருக்கிறோம் என்பதற்கான அரசு தரும் ஆறுதலாக இருக்கும். எங்களது வலியை உணர்ந்த நீங்கள் எங்களுக்கு வாழ்வில் ஒரு சிறிய ஒளி கொடுப்பீங்கன்னு நம்பறேன்.

இப்படிக்கு அரசின் நிழலில் வாழும்... கைம்பெண்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us