15 ஆண்டுகளுக்கு மேல் பரிதவிப்பு: பகுதி நேர ஆசிரியர்கள் பிரச்னை தீருமா?
15 ஆண்டுகளுக்கு மேல் பரிதவிப்பு: பகுதி நேர ஆசிரியர்கள் பிரச்னை தீருமா?
UPDATED : ஜூன் 20, 2026 08:52 PM
ADDED : ஜூன் 20, 2026 07:52 PM
-நமது நிருபர்-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் 11,773 பேரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்க்கைக் கல்வி பாட ஆசிரியர்களாக 11,773 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதே பாடங்களில் சிறப்பாசிரியர்களாக பணி புரிபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படை சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே பாடங்களில் தற்காலிகமாக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிகின்றவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
ஒரே கல்வித் தகுதி, ஒரே பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சமவேலை சமஊதியம் வழங்கப்பட வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கும் சமவேலை, சமஊதியம் வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனாலும் தமிழ்நாட்டில் முந்தைய அரசுகள் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்காமலும், சமவேலை சமஊதியம் வழங்காமலும் புறக்கணித்து விட்டது. இதனால் காலமுறை சம்பளம் மற்றும் பதவி உயர்வு பெற்று இருக்க வேண்டியவர்களை, பகுதிநேர ஆசிரியர்களாகவே முடக்கி பணிநிரந்தரம் செய்யாமல், தொகுப்பூதியம் வழங்குவதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இந்த பிரச்னை குறித்து, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களில் 5 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.
எனவே 11,773 பகுதிநேர ஆசிரியர்களை, பணி நிரந்தரமாக்கி த.வெ.க., அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்' என்றார்.
