ADDED : மார் 17, 2026 04:23 AM

புதுச்சேரி: ஜிப்மரில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினராக புதுச்சேரி அரசு செயலர் முத்தம்மா பங்கேற்று பேசுகையில், '' சமூகத்தின் பல துறைகளில் பெண்கள் இன்று தலைமைத்துவம் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகின்றனர். பெண்கள் தங்களது உடல் நலத்தை முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான மாமோகிராம், எலும்பு அடர்த்தி பரிசோதனை, மற்றும் முழு இரத்தப் பரிசோதனை போன்ற சீரான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.''
சிறப்பு விருந்தினர் ஜிப்மர் மூத்த நிதி ஆலோசகர் வர்ஷினி அருண் பேசுகையில்'' கடந்த நூற்றாண்டில் பெண்கள் அடைந்த முன்னேற்றப் பயணத்தை நினைவு கூர்ந்து, உலகளாவிய ரீதியிலும் இந்தியாவிலும் பெண்கள் கல்வி மற்றும் வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் பெற பல்வேறு சவால்களை எதிர் கொண்டும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், பெண்கள் சமூகத்தில் ஆதரவு பெறுபவர்களாக மட்டும் அல்லாமல், சமூக முன்னேற்றத்தில் பங்களிக்கும் தலைவர்களாக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார்.
மியாட் மருத்துவமனை மனநல ஆலோசகர் டாக்டர் லட்சுமி பிரபா, “பெண்களின் மனநலன்” என்ற தலைப்பில் பேசினார். ஜிப்மர் தனிச் செயலாளர் இளவரசி சங்கர் ஊக்கம் அளித்து பேசினார். மகளிர் தினக் கொண்டாட்டக் குழு தலைவர் டாக்டர் பாவனா அஷோக் பாதே நன்றி கூறினார்.

