ADDED : செப் 18, 2026 06:03 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக இதய விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
துணை சுகாதார செவிலியர் கவிதா வரவேற்றார். மருத்துவ அதிகாரி (பொ) பத்மினி தலைமை தாங்கி இதய நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
டாக்டர் வினோத் பேசுகையில்,‘பொதுமக்கள் அனைவரும் தங்கள் ரத்த அழுத்தத்தை தங்கள் தொலைபேசி எண்ணை போல் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார்.
சுகாதார உதவியாளர்கள் பன்னீர்செல்வம், ஜெகநாதன் ஆகியோர் இதயத்தை காக்க சில எளிய வழிகள் என்ற தலைப்பில் பேசினர். அதில், தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி; உப்பு, எண்ணெய், புகை, மது தவிர்த்தல், பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்தல், மன அழுத்தத்தை குறைத்தல் போன்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும்’ என்றனர். துணை சுகாதார செவிலியர் ஜீனத் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுகாதார நிலைய ஆஷா ஊழியர்கள் செய்திருந்தனர்.
