ADDED : ஜூலை 10, 2025 06:30 AM
அரியாங்குப்பம் : விழுப்புரம் மாவட்டம், மயிலம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் ஜீவா, 18. இவரது குடும்பத்தினர், தற்போது நைனார்மண்டபத்தில் குடியிருந்து வருகின்றனர். ஜீவா பிளஸ் 2 முடித்து விட்டு, கல்லுாரியில் படிக்க விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், ஜீவாவின் உறவினர் ஒருவர் மூலம், தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிளம்பர் வேலைக்கு ஜீவா சென்றார்.நேற்று அந்த வீட்டில், வேலை செய்யும் போது, மோட்டார் மின் ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கியது. அதில் ஜீவா துாக்கி வீசப்பட்டு, மயங்கி விழுந்தார்.
உடன் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரியில் சேருவதற்காக காத்திருந்த ஜீவா இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.