ADDED : ஏப் 06, 2025 05:40 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுப்பட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் பைக் திருட்டு நடந்து வந்தது. நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு பைக் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
முற்கட்டமாக நேற்று முன்தினம் சூரமங்கலத்தில் பைக் திருட்டு வழக்கில் தனிப்படை போலீசார் கரியமாணிக்கம் முதல் திருவக்கரை வரை உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சூரமங்கலத்தில் திருடப்பட்ட பைக் திருவக்கரை, பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சரண் என்பவரது ஒர்க் ஷாப்பில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கை திருடியது தமிழக பகுதியான கொடுக்கூரைச் சேர்ந்த பானுபிரசாத், 20; எறையூர் மணிகண்டன், 20; விஜயகுமார், 27, என்பது தெரியவந்தது.
இவர்கள் பைக்குகளை திருடி, சரண் ஒர்க் ஷாப்பில் உடைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சூரமங்கலத்தில் திருடப்பட்ட பைக்குடன் சேர்த்து ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 6 திருட்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

