/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
6 பந்தில் 6 சிக்சர் * வம்ஷி கிருஷ்ணா கலக்கல்
/
6 பந்தில் 6 சிக்சர் * வம்ஷி கிருஷ்ணா கலக்கல்
UPDATED : பிப் 21, 2024 10:55 PM
ADDED : பிப் 21, 2024 10:44 PM

கடப்பா: சி.கே.நாயுடு போட்டியில் ஆந்திராவின் வம்சி கிருஷ்ணா, 6 பந்தில் 6 சிக்சர் விளாசி அசத்தினார்.
இந்தியாவில் முதல்தர சி.கே.நாயுடு டிராபி (23 வயதுக்குட்பட்ட) தொடர் (4 நாள்) நடக்கிறது. ஆந்திராவில் நடந்த போட்டியில் ரயில்வேஸ், ஆந்திர அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஆந்திர அணிக்கு நிகிலேஷ்வர் (20), விக்கெட் கீப்பர் வம்ஷி கிருஷ்ணா ஜோடி துவக்கம் தந்தது. ரயில்வேஸ் வீரர் தமன்தீப் சிங் வீசிய ஓவரை எதிர்கொண்டார் வம்ஷி.
இதன் முதல் மூன்று பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய வம்ஷி, கடைசி 3 பந்தையும் சிக்சருக்கு விரட்டினார். இவர் 64 பந்தில் 110 ரன் விளாசி அவுட்டானார். இதையடுத்து கிரிக்கெட் அரங்கில் ஒரே ஓவரில் வீசப்பட்ட 6 பந்திலும் சிக்சர் அடித்த வீரர்களான ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங் (இந்தியா), கிப்ஸ் (தெ.ஆப்.,), கேரி சோபர்சுடன் (வெ. இண்டீஸ்) இணைந்தார் வம்ஷி.
ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 378 ரன் எடுத்தது. ரயிஸ்வேஸ் அணிக்கு அன்ஸ் யாதவ் (268 ரன்), ரவி சிங் (258) கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 231 ஓவரில் 865/9 ரன் குவித்தது. போட்டி 'டிரா' ஆனது.
தமிழகம் வெற்றி
கேரளாவில் நடந்த போட்டியில் தமிழகம், கேரளா மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 311 ரன் எடுத்தது. கேரளா அணி இரு இன்னிங்சில் 133/10, 94/10 ரன் மட்டும் எடுக்க, தமிழக அணி இன்னிங்ஸ், 84 ரன்னில் வெற்றி பெற்றது. 2017-18க்குப் பின் இத்தொடரில் நாக் அவுட் போட்டிக்கு முன்னேறியது.

