/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் ஆவேசம்: தவறாக அவுட் வழங்கியதால்
/
அஷ்வின் ஆவேசம்: தவறாக அவுட் வழங்கியதால்
ADDED : ஜூன் 09, 2025 10:56 PM

கோவை: போட்டியில் தனக்கு தவறாக 'அவுட்' வழங்கியதால் அஷ்வின் ஆவேசமடைந்தார்.
கோவையில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் (ஜூன் 8) திண்டுக்கல் அணி (93/10), 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியிடம் (94/1) வீழ்ந்தது.
இப்போட்டியில் சாய் கிஷோர் வீசிய 5வது ஓவரின் 5வது பந்தை திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் அடிக்க முயன்றார். பந்து அஷ்வினின் பேடில் பட்டுச் சென்றது. இதற்கு, சாய் கிஷோர் எல்.பி.டபிள்யு., கேட்டார். ஆடுகளத்தில் இருந்து பெண் அம்பயர் கிரித்திகா உடனடியாக 'அவுட்' வழங்கினார்.
ஏற்கனவே டி.ஆர்.எஸ்., வாய்ப்புகளை வீணடித்தால் அஷ்வினால் 'ரிவியூ' கேட்க முடியவில்லை. அம்பயரிடம் சென்ற அஷ்வின், பந்து 'லெக் ஸ்டெம்சிற்கு' வெளியே 'பிட்ச்' ஆனது எனக் கூறினார். இதனை அம்பயர் கிரித்திகா கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அஷ்வின், 'பெவிலியன்' திரும்பிய போது பேட்டை வைத்து, தனது கால் பேடில் பலமாக தாக்கினார். பின் 'பவுண்டரி லயன்' அருகே சென்ற போது, தனது 'கிளவுசை' கழற்றி கோபமாக வீசி எறிந்தார்.
'டிவி' ரீப்ளேயில் பந்து 'லெக் ஸ்டெம்பிற்கு' வெளியே 'பிட்ச்' ஆனது தெளிவாக தெரிந்தது. சீனியர் வீரரான அஷ்வின், இப்படி நடந்து கொண்டது சர்ச்சை ஏற்படுத்தியது. 'மேட்ச் ரெப்ரி' அர்ஜன் கிருபால் சிங்கின் அறிக்கையின் படி, நடவடிக்கை எடுக்கப்படலாம்.