ADDED : ஜூலை 08, 2026 01:26 AM

நாட்டிங்காம்: மூன்றாவது 'டி-20' போட்டியில் இந்திய அணியின் பேட்டர்கள் ஏமாற்ற, 76 ரன்களில் சுருண்டு, 125 ரன் வித்தியாத்தில் படுதோல்வி அடைந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள 'உலக சாம்பியன்' இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
மூன்றாவது போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. இந்திய அணியில் பிஷ்னோய் நீக்கப்பட்டு 'வேகப்புயல்' பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டார். 15 வயது இளம் வைபவ் சூர்யவன்ஷி, மீண்டும் பங்கேற்றார். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு துவக்கத்தில் அர்ஷ்தீப் சிங் அசத்தினார். முதல் ஓவரை 'மெய்டனாக' வீசினார். முதல் விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது, பிரின்ஸ் யாதவ் பந்தில் போல்டானார் பட்லர் (36). கேப்டன் ஹாரி புரூக் (16), பெத்தல் (13), டாம் பான்டன் (0) நிலைக்கவில்லை. 12 ஓவரில் 111/4 ரன் எடுத்து தத்தளித்தது. பின் பில் சால்ட், 70 ரன் எடுத்து அசத்தினார். கடைசி கட்டத்தில் சாம் கர்ரான், 41 ரன் விளாசினார். கடைசி 8 ஓவரில் 90 ரன் எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 201/7 ரன் குவித்தது.
படுதோல்வி:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் தந்தார். ஆர்ச்சர், ஜோஷ் டங் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மா (10) ஏமாற்றினார். வைபவ் சூர்யவன்ஷி, 13 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்த சிறிது நேரத்தில் இஷான் கிஷான் 13 ரன்னில் அவுட்டானார்.
ஷ்ரேயஸ் ஐயர் (5), அக்சர் படேல்(10) கைவிட்டனர். திலக் வர்மா(3), ராணா(9), ஷிவம் துபே(2), அர்ஷ்தீப் சிங்(4) மற்றும் வருண் சக்கரவர்த்தி(5) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணி 11.4 ஓவரில் 76 ரன்களுக்கு சுருண்டது. 125 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
