தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ 'இளவரசன்' சுப்மன் சதம்... இந்தியா அபாரம் * 5 விக்கெட் வீழ்த்தினார் ஷமி * வீழ்ந்தது வங்கதேச அணி

'இளவரசன்' சுப்மன் சதம்... இந்தியா அபாரம் * 5 விக்கெட் வீழ்த்தினார் ஷமி * வீழ்ந்தது வங்கதேச அணி

'இளவரசன்' சுப்மன் சதம்... இந்தியா அபாரம் * 5 விக்கெட் வீழ்த்தினார் ஷமி * வீழ்ந்தது வங்கதேச அணி


ADDED : பிப் 20, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. சதம் விளாசிய சுப்மன் கில், வெற்றிக்கு கைகொடுத்தார்.

ஐ.சி.சி., சார்பில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்கான இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன. 'ஏ' பிரிவில் உள்ள இந்திய அணி, நேற்று வங்கதேசத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

சரிந்த 'டாப்'

வங்கதேச அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சவுமியா சர்கார், 'டக்' அவுட்டானார். கேப்டன் நஜ்முல் ஷான்டோ 'டக்' அவுட்டாகினார். மெஹிதி ஹசனையும் (5), ஷமி வெளியேற்றினார். அக்சர் படேல் வீசிய 9வது ஓவரின், 2, 3வது பந்தில் தன்ஜித் ஹசன் (25), அனுபவ முஷ்பிகுர் (0) வெளியேற, வங்கதேச அணி 35/5 என திணறியது.

தவ்ஹித் சதம்

பின் தவ்ஹித், ஜாக்கர் அலி இணைந்து அணியை மீட்டனர். 6வது விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்த போது, ஷமி பந்தில் ஜாக்கர் அலி (68) வெளியேறினார். ரிஷாத் (18) நிலைக்கவில்லை. தொடை பின்பகுதி காயத்தை பொருட்படுத்தாமல் ஆடிய தவ்ஹித் (100), ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் அடித்து அவுட்டானார். வங்கதேச அணி 49.4 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் ஷமி 5 விக்கெட் சாய்த்தார்.

சுப்மன் கலக்கல்

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ரோகித் 41 ரன்னில் அவுட்டானார். இந்திய அணி 10 ஓவரில் 69/1 ரன் எடுத்தது.

பின் சுப்மனுடன் இணைந்தார் கோலி. இருவரும் ஒன்றும் இரண்டுமாக ரன் சேர்க்க, இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. தான் சந்தித்த 35வது பந்தில் முதல் பவுண்டரி அடித்தார் கோலி (22), ரிஷாத் சுழலில் சிக்கினார். பொறுப்பாக ஆடிய 'பிரின்ஸ்' சுப்மன் சதம் எட்டினார்.

கடைசியில் ராகுல் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 46.3 ஓவரில் 231/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் (101), ராகுல் (41) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஷமி 200 விக்கெட்

வங்கதேசத்தின் ஜாக்கர் அலியை அவுட்டாக்கிய இந்தியாவின் ஷமி, ஒருநாள் அரங்கில் 200 விக்கெட் (104 போட்டி) என்ற மைல்கல்லை எட்டினார்.

* சர்வதேச அரங்கில் அதிவேகமாக இந்த இலக்கை எட்டிய பவுலர்களில் ஸ்டார்க்கிற்கு (102, ஆஸி.,) அடுத்து, இரண்டாவது இடத்தை சக்லைன் முஷ்தாக் உடன் (104, பாக்.,) பகிர்ந்து கொண்டார்.

* குறைந்த பந்தில் 200 விக்கெட் சாய்த்த பவுலர்களில் ஷமி முதலிடம் பிடித்தார். இவர் 5126 பந்தில் இந்த இலக்கை எட்டினார். அடுத்த இரு இடத்தில் ஸ்டார்க் (5240, ஆஸி.,), முஷ்தாக் (5240, பாக்.,) உள்ளன்.

6வது முறை

ஒருநாள் அரங்கில் அதிக முறை 5 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் ஷமி (6 முறை) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பும்ரா, சகால், குல்தீப், ஜடேஜா தலா 2 முறை இதுபோல அசத்தினர்.

60 விக்கெட்

உலக கோப்பை (50 ஓவர், 18 போட்டி, 55 விக்.,), சாம்பியன்ஸ் டிராபி (1ல் 5 விக்.,), தொடரில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் முதலிடம் பிடித்தார் ஷமி. இவர் 19 போட்டியில் 60 விக்கெட் சாய்த்துள்ளார். ஜாகிர் கான் 59 (44+15), ஸ்ரீநாத் 47 (44+3), ஜடேஜா 43 (27+16) அடுத்த 3 இடத்தில் உள்ளனர்.

இரண்டாவது 'பெஸ்ட்'

ஷமி நேற்று 5/53 விக்கெட் சாய்த்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இது இந்திய பவுலரின் இரண்டாவது 'பெஸ்ட்' ஆனது. முதலிடத்தில் ஜடேஜா (5/36, எதிர்-வெ.இண்டீஸ், 2013) உள்ளார்.

156 கேட்ச்

ஒருநாள் அரங்கில் அதிக கேட்ச் செய்த இந்திய வீரர்களில் அசாருடன் (334 போட்டி) முதலிடம் பிடித்தார் கோலி (298 போட்டி). இருவரும் தலா 156 கேட்ச் செய்துள்ளனர்.

* சர்வதேச அளவில் இலங்கையின் சங்ககரா (448ல் 218), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (375ல் 160) 'டாப்-2' இடத்தில் உள்ளனர். மூன்றாவது இடத்தில் அசார், கோலி உள்ளனர்.

ரோகித் கை நழுவியது

அக்சர் 'ஹாட்ரிக்' தகர்ந்தது

நேற்று 9வது ஓவரை வீசிய அக்சர் படேல், 2வது பந்தில் தன்ஜித் (25), 3வது பந்தில் முஷ்பிகுரை (0) அவுட்டாக்கினார். 4வது பந்தில் ஜேக்கர் அலி கொடுத்த எளிய 'கேட்ச்' வாய்ப்பை, சிலிப் பகுதியில் கேப்டன் ரோகித் தவற விட, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. இந்த விரக்தியில் மைதானத்தில் மூன்று முறை ஓங்கி அடித்த ரோகித், அக்சரை நோக்கி கைகூப்பி 'சாரி' கேட்டார்.

அக்சர் கூறுகையில்,'' முதல் 2 விக்கெட் சாய்த்தவுடன், அடுத்த பந்து, ஜாக்கர் பேட்டில் பட்டு எழும்பியது. அவ்வளவு தான் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தி விட்டேன் என நினைத்து கொண்டாடத் துவங்கினேன். பிறகு தான் ரோகித் நழுவவிட்டார் எனத் தெரிந்தது. கிரிக்கெட்டில் இது சகஜம் தான்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us