தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டில்லி...இந்தியா 'கில்லி': தொடரை வென்று அசத்தல்

டில்லி...இந்தியா 'கில்லி': தொடரை வென்று அசத்தல்

டில்லி...இந்தியா 'கில்லி': தொடரை வென்று அசத்தல்


ADDED : செப் 15, 2026 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 11:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி காயத்தால் விலக, ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு நேற்றும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஏமாற்றிய துவக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (0), கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் ஜோடி துவக்கம் கொடுத்தது. போட்டியின் 9 வது ஓவரை வீசினார் நிதிஷ் குமார். இதன் முதல் பந்தில் ஜத்ரன் (37) வெளியேறினார்.

செடிகுல்லா 12 ரன் எடுத்த நிலையில், பிஷ்னோய் சுழலில் சிக்கினார். வந்த வேகத்தில் பவுண்டரி அடித்த குல்பதின் (10), நிதிஷ் குமார் பந்தில் திரும்பினார்.

அக்சர் அபாரம்

ஷிவம் துபே வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில், இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார் ரசூலி. மறுபக்கம் ஓமர்சாய் (11), அக்சர் பந்தில் அவுட்டானார். 15 பந்தில் 26 ரன் எடுத்து நம்பிக்கை தந்த ரசூலியை, அர்ஷ்தீப் சிங் அனுப்பி வைத்தார். கடைசி நேரத்தில் முகமது நபி, ரஷித் கான் இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர்.

பிஷ்னோய் ஓவரில், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என அடித்தார் முகமது நபி. அர்ஷ்தீப் வீசிய 18 வது ஓவரில் 16 ரன் எடுக்கப்பட்டன. இதன் பின் பும்ரா 'வேகத்தில்' முகமது நபி (20), நிதிஷ் குமார் பந்தில் ரஷித் கான் (28) அவுட்டாகினர்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 159/8 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் நிதிஷ் குமார் 3, அர்ஷ்தீப் 2 விக்கெட் சாய்த்தனர்.

சாம்சன் விளாசல்

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சாம்சன், அபிஷேக் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் மாறி மாறி சிக்சர்களாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவரில் 88 ரன் சேர்த்தது இந்தியா. அபிஷேக் (19 பந்து, 39 ரன்) அவுட்டானார். அரைசதம் அடித்த சாம்சன், 22 பந்தில் 57 ரன் எடுத்தார். ஷ்ரேயஸ் (11) ஏமாற்றினார்.

மறுபக்கம் இஷான் கிஷான் தன் பங்கிற்கு விளாச, இந்திய அணி 14.5 ஓவரில் 163/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இஷான் (38), திலக் வர்மா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us