/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கண்டிப்பான டிராவிட்... கனிவான காம்பிர் * வித்தியாசம் சொல்கிறார் அஷ்வின்
/
கண்டிப்பான டிராவிட்... கனிவான காம்பிர் * வித்தியாசம் சொல்கிறார் அஷ்வின்
கண்டிப்பான டிராவிட்... கனிவான காம்பிர் * வித்தியாசம் சொல்கிறார் அஷ்வின்
கண்டிப்பான டிராவிட்... கனிவான காம்பிர் * வித்தியாசம் சொல்கிறார் அஷ்வின்
ADDED : செப் 24, 2024 11:02 PM

சென்னை: ''டிராவிட் ரொம்ப 'ஸ்டிரிக்ட்'. காம்பிர் எப்போதும் 'ரிலாக்ஸ்' ஆக இருப்பார்,'' என அஷ்வின் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டிராவிட். சமீபத்தில் இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வெல்ல பக்கபலமாக இருந்தார். கடந்த ஜூலையுடன் இவரது பதவிக்காலம் முடிந்தது.
புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியில் இந்திய அணி அசத்துகிறது. சென்னையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றது. இப்போட்டியில் இந்தியாவின் வெற்றி நாயகனாக ஜொலித்தார் அனுபவ 'ஸ்பின்னர்' அஷ்வின்.
இதயம் கவர்ந்தவர்
இரு பயிற்சியாளர்களின் அணுகுமுறை பற்றி அஷ்வின் கூறுகையில்,''டிராவிட் மிகவும் கண்டிப்பானவர். களத்தில் இறங்கியதும் சடசடவென வீரர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பார். சாதாரண பாட்டிலை கூட குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வைக்க வேண்டும் என்பார்.
காம்பிர் எதற்கும் பதட்டப்படமாட்டார். எப்போதும் 'ரிலாக்சாக' இருப்பார். காலையில் பொதுவாக வீரர்களின் சந்திப்பு நடக்கும். அப்போது போட்டிக்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும். இதற்கு நீங்கள் வருகிறீர்களா? விருப்பம் இருந்தால் 'ப்ளீஸ்' வாருங்கள்.. என சகஜமாக பேசுவார். சக வீரர்கள் உட்பட அனைவரது இதயங்களையும் காம்பிர் கவர்ந்து விடுவார். இவரது அணுகுமுறை அனைவருக்கும் பிடிக்கும்,''என்றார்.
கிரிக்கெட் விளையாட பிறந்தவர்
கார் விபத்தில் காயமடைந்த இந்திய வீரர் ரிஷாப் பன்ட், மனஉறுதியுடன் மீண்டார். 16 மாதங்களுக்கு பின் சென்னை டெஸ்டில் களமிறங்கினார். அசத்தல் சதம் விளாசி திறமை நிரூபித்தார். இது குறித்து அஷ்வின் கூறுகையில்,''ரிஷாப் பன்ட் வலிமையான வீரர். கிரிக்கெட் விளையாடவே பிறந்தவர். ஒரே கையால் இமாலய சிக்சர் அடிப்பதில் வல்லவர். பந்துகளை சிதறடித்து ரன் சேர்ப்பது இவரது பலம்,''என்றார்.
'சூப்பர்மேன்' ரிஷாப்
பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறுகையில்,''கார் விபத்தில் ரிஷாப் பன்ட் சிக்கிய போது நாங்கள் கவலை அடைந்தோம். இந்த சோகத்தில் இருந்து 'சூப்பர்மேன்' போல மீண்டு வந்துள்ளார். சென்னை டெஸ்டில் சிறப்பாக விளையாடி, அதிசயம் நிகழ்த்தியுள்ளார். இவரது வாழ்க்கை பாதை வருங்கால தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும்,''என்றார்.