/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ரா...பேர கேட்டா அதிருதுல்ல * பாண்டிங் பாராட்டு
/
பும்ரா...பேர கேட்டா அதிருதுல்ல * பாண்டிங் பாராட்டு
பும்ரா...பேர கேட்டா அதிருதுல்ல * பாண்டிங் பாராட்டு
பும்ரா...பேர கேட்டா அதிருதுல்ல * பாண்டிங் பாராட்டு
ADDED : ஆக 20, 2024 11:40 PM

துபாய்: ''மூன்றுவித கிரிக்கெட்டிலும் கடந்த 6 ஆண்டுகளாக பும்ரா முத்திரை பதிக்கிறார்,''என பாண்டிங் தெரிவித்தார்.
இந்திய அணியின் 'வேகப்புயல்' பும்ரா, 30. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 'டி-20' என அனைத்திலும் அசத்துகிறார். முதுகு பகுதி காயத்தில் இருந்து விரைவாக மீண்ட இவர், சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில் மிரட்டினார். 15 விக்கெட் வீழ்த்தி, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கினார். தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
பும்ராவை பாராட்டி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பும்ரா காயம் அடைந்த போது பலரும் கலக்கமடைந்தனர். இவரால் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியுமா என கேள்வி எழுப்பினர். ஆனால் வலிமையாக மீண்டு வந்தார். எதிரணி பேட்டர்கள் பும்ராவின் பெயரை கேட்டாலே பதறுகின்றனர். இவரது பந்துவீச்சை சமாளிப்பது கடினம் என வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்றனர். இவரது ஒரு பந்து 'ஸ்விங்' ஆகிறது. இன்னொரு பந்து அசுர வேக 'யார்க்கராக' வருகிறது. 'இன்-ஸ்விங்கர்' வீசப் போகிறாரா, 'அவுட்-ஸ்விங்கர்' வீசப் போகிறாரா என்பதை கணிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
ஜாம்பவான் பவுலர்கள்
'டி-20' உலக கோப்பை தொடரில் நல்ல வேகத்துடன் துல்லியமாக பந்துவீசினார். இதனால் எளிதில் விக்கெட் வீழ்த்த முடிந்தது. இவரது திறமை ஒவ்வொரு ஆண்டும் மெருகேறுவதை காண முடிகிறது. நல்ல திறமையுடன் நிலையான பந்துவீச்சை வெளிப்படுத்தினால், மிகச் சிறந்த வீரராக ஜொலிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மெக்ராத், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்றவர்கள் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடினாலும், திறமை துளி அளவும் குறையவில்லை. இதனால் தான் மற்ற வீரர்களிடம் இருந்து வேறுபட்டு ஜாம்பவான்களாக திகழ்கின்றனர். இதே போல பும்ராவும் கடந்த 5-6 ஆண்டுகளாக மூன்றுவித கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பிரகாசிக்கிறார். வரும் போட்டிகளிலும் இவரது அசத்தல் பந்துவீச்சு தொடரும்.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
கேப்டன் பதவி தேவையா
பும்ராவுக்கு கேப்டன் பதவி மீது ஆசை உண்டு. சமீபத்திய பேட்டியில் ''வேகப்பந்துவீச்சாளர்கள் சிறந்த கேப்டனாக பிரகாசிக்க முடியும். இதற்கு உதாரணமாக இந்தியாவின் கபில் தேவ், பாகிஸ்தானின் இம்ரான் கானை குறிப்பிடலாம்,''என்றார்.
இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறுகையில்,''பாபர் ஆசமை போல பும்ராவுக்கும் கேப்டன் பதவி பிடித்திருக்கிறது. கேப்டன் பதவியை தேடிப் போகக்கூடாது. உலகின் சிறந்த பவுலரான இவர், தனது பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். கபில், இம்ரான் போன்றவர்கள் 'ஆல்-ரவுண்டர்கள்'. அதனால் தான் கேப்டன் பதவியில் பிரகாசித்தனர். அவர்கள் பவுலராக அணியில் களமிறங்கிய காலத்தில், கேப்டன் பதவி தரப்படவில்லை. பவுலர், 'ஆல்-ரவுண்டர்' இடையே உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். சாம்பியன்ஸ் டிராபிக்கு (2025) பின், இந்திய அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்படலாம். இவருக்கு எனது வாழ்த்துகள்,'' என்றார்.

