ஜோராக வென்றது இந்தியா * சுதார் சுழலில் சுருண்டது இலங்கை
ஜோராக வென்றது இந்தியா * சுதார் சுழலில் சுருண்டது இலங்கை
ADDED : ஆக 19, 2026 11:01 PM

காலே: இந்திய அணி தனது 600 வது டெஸ்டில், 165 ரன் வித்தியாசத்தில் ஜோராக வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய மானவ் சுதார், இரு இன்னிங்சில் 10 விக்கெட் சாய்த்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், காலே சர்வதேச மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 462, இலங்கை 284 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 193 ரன் எடுத்தது. நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 84/4 ரன் எடுத்து, 288 ரன் பின்தங்கியிருந்தது. கேப்டன் தனஞ்சயா டி சில்வா (31), சோனல் தினுஷா (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் 15 நிமிடம் முன்னதாக துவங்கியது. ஜடேஜா பந்தில் தனஞ்சயா ஒரு பவுண்டரி அடிக்க, இலங்கை அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. ஜடேஜா வீசிய போட்டியின் 49 வது ஓவரில் அடுத்தடுத்த இரண்டு பவுண்டரி அடித்த தனஞ்சயா, அரைசதம் கடந்தார்.
குல்தீப் சுழலில் ஒரு சிக்சர் அடித்தார் தினுஷா. முதல் இன்னிங்சில் 100 ரன் எடுத்த தினுஷா, இம்முறை அரைசதம் எட்டினார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன் சேர்த்த நிலையில், ஜடேஜா 'சுழலில்' திருப்பம் தந்தார். தனஞ்சயாவை (59) வெளியேற்றினார்.
பின் வந்த டிக்வெல்லா, குல்தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இவர் 10 ரன் மட்டும் எடுத்த நிலையில், பிரசித் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்தார்.
சுதார் அபாரம்
உணவு இடைவேளைக்குப் பின் தினுஷா, கேஷரா இணைந்து போராடினர். குல்தீப் பந்தில் கேஷரா, ஜடேஜா பந்தில் தினுஷா தலா ஒரு பவுண்டரி அடித்தனர். மீண்டும் ஜடேஜா பந்தில் தினுஷா, பவுண்டரி விளாசினார்.
போட்டியின் 76வது ஓவரை வீசினார் மானவ் சுதார். 84 ரன் எடுத்திருந்த தினுஷா, முதல் பந்தில் 'லெக் ஸ்லிப்' பகுதியில் நின்றிருந்த ஜுரெலிடம் கேட்ச் கொடுக்க, இந்திய அணியின் வெற்றி பிரகாசம் ஆனது.
அடுத்த பந்தில் பிரபாத் ஜெயசூர்யாவை 'டக்' அவுட்டாக்கினார் சுதார். கடைசி பந்தில் லகிரு குமாராவையும் 'டக்' அவுட்டாக்கினார்.
மறுபடியும் வந்த சுதார், இம்முறை கேஷராவை (20) போல்டாக்கினார். கடைசி 7 ரன் எடுப்பதற்குள், 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 206 ரன்னில் ஆல் அவுட்டானது.
600 வது டெஸ்டில் இந்திய அணி, 165 ரன்னில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இரு இன்னிங்சில் சேர்த்து, இந்தியாவின் சுதார் 10 விக்கெட் (4+6) சாய்த்தார். ஆட்டநாயகன் விருதை தேவ்தத் படிக்கல் (167, 44 ரன்) தட்டிச் சென்றார்.
10 விக்கெட், 131 ரன்
காலே டெஸ்டில் மானவ் சுதார், இரு இன்னிங்சில் 131 ரன் (76+55) விட்டுக் கொடுத்து, 10 (4+6) விக்கெட் சாய்த்தார். இலங்கை மண்ணில் நடந்த டெஸ்டில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்ய இந்திய பவுலர் ஆனார்.
இதற்கு முன் ஹர்பஜன் சிங் 2008ல் 153 ரன்னுக்கு 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அஷ்வின் (2017ல் 10/160) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
* நேற்று மானவ் சுதார், ஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்தார். ஜடேஜாவுக்கு (2019, எதிர்-தென் ஆப்ரிக்கா) அடுத்து இதுபோல அசத்திய இந்திய பவுலர் ஆனார்.
* முதல் இரு டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் ஹிர்வானி (24), அக்சருக்கு (18) அடுத்த இடம் பெற்றார் மானவ் சுதார் (17).
* முகமது நிசாருக்கு அடுத்து, சொந்த, அன்னிய மண்ணில் பங்கேற்ற அறிமுக டெஸ்டில், குறைந்த பட்சம் தலா 5 விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்திய பவுலர் ஆனார் மானவ் சுதார் (7+10).
டிக்வெல்லா வீழ்ந்தது எப்படி
நேற்று டிக்வெல்லா பேட்டிங் செய்த போது, ஜெய்ஸ்வால் அவரிடம் அடுத்தடுத்து பேசிக் கொண்டே இருந்தார்.
இதன் விவரம்:
ஜெய்ஸ்வால்: முதல் இன்னிங்சில் பெரியளவு ஷாட் எதுவும் இல்லை. இம்முறை ஏதாவது நான் பார்க்க வேண்டும்.
டிக்வெல்லா: சரி
ஜெய்ஸ்வால்: பந்தை அந்த இடத்தில் 'ஹூக் ஷாட்' அடியுங்கள் (மைதானத்தின் ஒரு பகுதியை காட்டினார்).
டிக்வெல்லா: நான் ஜெய்ஸ்வால் இல்லையே. எனக்கு பிரிமியர் தொடரில் வாய்ப்பு தாருங்கள், கட்டாயம் அடிப்பேன்.
ஜெய்ஸ்வால்: நான் சொன்ன இடத்தில் அடித்தால், சங்ககராவிடம் (ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி பயிற்சியாளர்) சொல்லி, 100 சதவீதம் வாய்ப்பு பெற்று தருவேன்.
இந்த உரையாடலில் கவனம் சிதறிய டிக்வெல்லா, பிரசித் பந்தில் அவுட்டாக, இந்திய அணியினர் ஜெய்ஸ்வால் அருகில் சென்று பாராட்டினர்.
187 வெற்றி
டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் நான்காவது இடத்தை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் பகிர்ந்து கொண்டது. இரு அணிகளும் 187 டெஸ்டில் வென்றன. முதல் மூன்று இடத்தில் ஆஸ்திரேலியா (426), இங்கிலாந்து (405), தென் ஆப்ரிக்கா (191) உள்ளன.
