/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய வீரர்கள் பயிற்சி * நாளை இரண்டாவது மோதல்
/
இந்திய வீரர்கள் பயிற்சி * நாளை இரண்டாவது மோதல்
ADDED : பிப் 10, 2026 11:20 PM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை தொடருக்காக இந்திய அணியினர் டில்லியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது.
அடுத்து இரண்டாவது போட்டியில் நாளை, நமீபிய அணியை எதிர்கொள்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் இப்போட்டி நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பும்ரா வருகை
முதல் போட்டியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறவில்லை. தற்போது முழுமையாக குணமடைந்தார் பும்ரா. இதையடுத்து நேற்று வலைப்பயிற்சியில் பவுலிங் பயிற்சியை துவக்கினார். கேப்டன் சூர்யகுமாருக்கு முழுவேகத்தில் பந்து வீசினார். அடுத்து திலக் வர்மா பேட்டிங் பயிற்சி செய்தார்.
உலகின் பேட்டர்களுக்கு புரியாத புதிராக இருக்கும் வருண் சக்ரவர்த்தியின் சுழலில், சூர்யகுமார், திலக் வர்மா என இருவரும் எளிதாக 'ஷாட்' அடித்து மிரட்டினர்.
இவரது பவுலிங்கில், திலக் வர்மா அடித்த பந்து 100 மீ., துாரத்துக்கும் அதிகமாக சென்று, கேலரியின் உயரமான பகுதியில் விழுந்தது.
சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 26. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டில் ஏற்பட்ட விலா எலும்பு காயத்தால் விலகினார். தற்போது குணமடைந்த இவர், நேற்று இந்திய அணியுடன் இணைந்தார்.
இருப்பினும், பீல்டிங் பயிற்சியில் மட்டும் ஈடுபட்ட வாஷிங்டன், துவக்கத்தில் பந்துவீசவில்லை. பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கரிடம், நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார்.
பின் பயிற்சிக்கு திரும்பிய வாஷிங்டன், குல்தீப் என இருவரும் திலக் வர்மாவுக்கு பந்து வீசினர்.
அபிஷேக் 'ஆப்சென்ட்'
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, வயிற்று பிரச்னை காரணமாக பீல்டிங் செய்யவில்லை. காம்பிர் வீட்டு விருந்துக்கு சென்ற போதும், இவர் மட்டும் விரைவில் ஓட்டலுக்கு திரும்பினார்.
தற்போது மீண்டு வரும் இவர், நேற்று பயிற்சியில் பங்கேற்கவில்லை.

