இந்திய அணியில் மாற்றம் வேண்டுமா: என்ன சொல்கிறார் யுவராஜ் சிங்
இந்திய அணியில் மாற்றம் வேண்டுமா: என்ன சொல்கிறார் யுவராஜ் சிங்
ADDED : செப் 16, 2026 09:36 PM

புதுடில்லி: ''உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யத் தேவையில்லை,'' என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி., ஒருநாள் உலக கோப்பை தொடர், 2027, அக்.,-நவ.,ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்க உள்ளது. இதற்கு முன் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (3 போட்டி), இலங்கை (3), ஜிம்பாப்வே (3), நியூசிலாந்து (3) அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.
தவிர, தென் ஆப்ரிக்காவுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட், சர்வதேச 'டி-20'ல் இருந்து ஓய்வு பெற்று விட்ட போதும், 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா, கோலிக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் 'ஆல் ரவுண்டர்', 2011 உலக கோப்பை தொடர் நாயகன், யுவராஜ் சிங் கூறியது:
உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. இதனால், அடுத்த ஆண்டு விளையாட உள்ள அணியை சிறப்பான முறையில் தயார் செய்ய, இப்போது இருந்தே கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், கடைசி நேரத்தில் பெரியளவு மாற்றங்கள் செய்வது நல்லதல்ல.
கடைசி நேரத்தில் அல்லது தொடர் நடக்கும் போது செய்த மாற்றங்கள் தான், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைகின்றன.
இதனால், 16 அல்லது 20 என எத்தனை வீரர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சம அளவில் போதுமான வாய்ப்பு கொடுத்து அணியை தயார் செய்ய வேண்டும். ஏனெனில் தற்போது 'டி-20' போட்டிகள் அதிகமாகவும், ஒருநாள் போட்டிகள் குறைவாகவும் உள்ளன.
வரும் போட்டிகளில் தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
