/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா * ஆஸி., யுடன் மூன்றாவது மோதல்
/
ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா * ஆஸி., யுடன் மூன்றாவது மோதல்
ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா * ஆஸி., யுடன் மூன்றாவது மோதல்
ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா * ஆஸி., யுடன் மூன்றாவது மோதல்
ADDED : அக் 24, 2025 10:51 PM

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட இந்திய அணி, ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை 2-0 என கைப்பற்றியது. இன்று முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது, கடைசி போட்டி சிட்னியில் நடக்கிறது.
மீள்வாரா கோலி
டெஸ்ட் போன்று இல்லாமல், ஒருநாள் அரங்கில் தனக்கு விருப்பமான அணியை தேர்வு செய்வதில், சுப்மனுக்கு சிக்கல் உள்ளதாக தெரிகிறது. ரோகித், கோலி மீது அதிக கவனம் செலுத்தப்படுவதால், கேப்டன் பணியில் தடுமாறுகிறார். முதல் இரு போட்டியில் 10, 9 ரன் மட்டும் எடுத்தார்.
தவிர, இந்தியா இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் முழுமையாக ஒருநாள் தொடரை இழந்தது இல்லை. இதனால், இன்று வென்றாக வேண்டிய நெருக்கடியில் இந்தியா களமிறங்குகிறது.
துவக்கத்தில் ரோகித் (73) கைகொடுக்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக அடுத்தடுத்த ஒருநாள் போட்டியில் 'டக்' அவுட்டான கோலி, மீண்டு வர வேண்டும். 'மிடில் ஆர்டரில்' ஷ்ரேயஸ், அக்சர் படேல் உதவுவது பலம். ராகுல், வாஷிங்டன், நிதிஷ் குமார் வாய்ப்பை பயன்படுத்தி ரன் சேர்த்தால் நல்லது.
தேறாத ஹர்ஷித்
வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் நம்பிக்கை தருகின்றனர். ஹர்ஷித் ராணா மட்டும் அதிக ரன்களை விட்டுத் தருகிறார். இவருக்குப் பதில் இன்று பிரசித் கிருஷ்ணா வாய்ப்பு பெறலாம். சுழலில் 'மேட்ச் வின்னர்' குல்தீப் சேர்க்கப்படாதது ஏமாற்றம் தான். கடைசி போட்டியில் களமிறங்குவாரா என இன்று தெரியும்.
இளம் படை
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அலெக்ஸ் கேரி, தவிர, இளம் வீரர்கள் கொனாலி, 9 ஆண்டு காத்திருப்புக்குப் பின் ஒருநாள் அணியில் இடம் பிடித்த ரென்ஷா, மிட்சல் ஓவன், மாத்யூ ஷார்ட் பேட்டிங்கில் கைகொடுத்து அணியை வெற்றி பெறச் செய்வது பலம்.
'சீனியர்' வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க்கிற்கு இன்று ஓய்வு கொடுக்கப்படலாம். முதல் போட்டியில் அசத்திய நாதன் எல்லிஸ், ஆல் ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் இடம் பெற உள்ளனர். தவிர பார்ட்லெட், 'சுழல்' ஜாம்பா அணிக்கு தொல்லை தர காத்திருக்கின்றனர்.
கைகொடுக்குமா ஆடுகளம்
சிட்னி ஆடுகளத்தில் சமீபத்திய போட்டிகளில் பந்தில் அதிக திருப்பம் ஏற்படுவது இல்லை. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு கைகொடுக்கலாம்.
தொடரும் ஏமாற்றம்
இந்திய அணி கடைசியாக 2023 உலக கோப்பை தொடர் அரையிறுதியில் (எதிர்-நியூசி.,) 'டாஸ்' வென்றது. இதன் பின் தொடர்ந்து 17 ஒருநாள் போட்டிகளில் 'டாஸ்' வெல்லவில்லை. ரோகித், ராகுல், சுப்மன் என மூன்று கேப்டன் மாறிய பின்பும் சோகம் தொடர்கிறது.
யார் ஆதிக்கம்
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் சிட்னியில் 19 ஒருநாள் போட்டியில் மோதின. இந்தியா 2ல் மட்டும் (2008, 2016) வென்றது. 16 போட்டியில் தோற்றது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
* ஆஸ்திரேலிய அணி இங்கு கடைசியாக மோதிய 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கடைசி 3 போட்டியில் ஆஸ்திரேலியா இங்கு, 288/5, 374/6, 389/4 என ரன் குவித்து வென்றது.
இது கடைசி
ஆஸ்திரேலியாவில் 2007-2008ல் கோலி 2011-2012ல் ரோகித், முதன் முதலில் ஒருநாள் தொடரில் பங்கேற்றனர். அடுத்த இரு ஆண்டு இங்கு, இந்தியா ஒருநாள் தொடரில் பங்கேற்காது. இதனால் கோலி, ரோகித்துக்கு ஆஸ்திரேலிய மண்ணில், இது கடைசி ஒருநாள் போட்டியாக அமைகிறது.

