
புதுடில்லி: இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 34. கடைசியாக 2023, உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். இதில் 24 விக்கெட் சாய்த்தார். பின் கடந்த பிப்ரவரி மாதம் இவரது கணுக்காலில் 'ஆப்பரேஷன்' நடந்தது.
இதில் இருந்து மீண்டு வருகிறார். இதற்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வரும் ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட காத்திருக்கிறார்.
இதனிடையே,'ஷமி முழங்காலில் மீண்டும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் மீண்டு வர, குறைந்தது 6 முதல் 8 வாரம் தேவைப்படும். ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கவுள்ள 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் ஷமி பங்கேற்க முடியாது,' என செய்தி வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்து, ஷமி வெளியிட்ட செய்தி:
காயத்தில் இருந்து மீண்டுவர முயற்சி செய்து வருகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பார்டர்-கவாஸ்கர்' தொடரில் நான் பங்கேற்க மாட்டேன் என நான் அல்லது இந்திய கிரிக்கெட் போர்டு ஒருபோதும் தெரிவித்தது இல்லை. ஆனால், எவ்வித அடிப்படையும் இல்லாமல், ஏன் இப்படி வதந்திகளை பரப்புகின்றனர். உறுதிப்படுத்தப் படாத இதுபோன்ற செய்திகளில் யாரும் கவனம் செலுத்த வேண்டாம். போலியான தகவல்களை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

