முன்னிலை பெற்றது தமிழகம் * 182 ரன் எடுத்தார் விமல் குமார்
முன்னிலை பெற்றது தமிழகம் * 182 ரன் எடுத்தார் விமல் குமார்
ADDED : ஜன 31, 2026 10:52 PM

சேலம்: விமல் குமார் சதம் கைகொடுக்க, ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி முன்னிலை பெற்றது.
சேலத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர், 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், பரோடா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் பரோடா அணி 375 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 118/0 ரன் எடுத்து, 257 ரன் பின்தங்கி இருந்தது. ஆதிஷ் (42), விமல் (66) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆதிஷ் (43) விரைவில் அவுட்டானார். பிரதோஷ், விமல் குமார் இணைந்தனர். 2வது விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்த போது, பிரதோஷ் (80) அவுட்டானார். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விமல் குமார், சதம் கடந்தார். இவர், 182 ரன் எடுத்து, பார்கவ் பந்தில் வீழ்ந்தார். 3வது நாள் ஆட்ட முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 411/7 ரன் எடுத்து, 36 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
ஹரியானாவின் ரோடக்கில் நடந்த போட்டியில் பெங்கால் அணி (193, 200), 188 ரன் வித்தியாசத்தில் ஹரியானாவை (100, 105) வீழ்த்தியது. பெங்கால் பவுலர் ஷாபாஸ் அகமது 11 விக்கெட் (5+6) சாய்த்தார்.
சண்டிகரில் நடந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி (453/6, டிக்ளேர்), சண்டிகரை (136, 261) 56 ரன்னில் வென்றது.
