
தேனி: தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த 'கூச் பெஹார்' டிராபி தொடர் காலிறுதி (4 நாள்) போட்டி நேற்று துவங்கியது. நடப்பு சாம்பியன் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற தமிழக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு நவின் (19), குஷ் பர்தியா (44) ஜோடி துவக்கம் தந்தது. ஹரி 43 ரன் எடுத்தார். தமிழக அணி கேப்டன் அபினவ் கண்ணன், 6 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இணைந்த வினீத், ஷவின் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். 5வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது, 86 பந்தில் 87 ரன் எடுத்த வினீத் அவுட்டானார்.
பரத் (1), ஹேம்சுதேசன் (0) அணியை கைவிட, கிஷோர் 17 ரன் எடுத்து உதவினார். கடைசி நேரத்தில் ஷவின் (62) அவுட்டாகி திரும்பினார். முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 296/9 ரன் எடுத்திருந்தது. பிரனவ் (2), சந்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர். சவுராஷ்டிரா சார்பில் தேவர்ஷ் அதிகபட்சம் 5 விக்கெட் சாய்த்தார்.

