ADDED : மார் 12, 2024 10:56 PM

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க ரிஷாப் பன்டுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி தந்தது.
இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 26. கடந்த 2022, டிச. 30ல் டில்லியில் இவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. வலது முழங்காலில் தசை நார் கிழிந்தது. கணுக்கால், மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் குணமடைந்த நிலையில் போட்டியில் களமிறங்க தேவையான 'பிட்னஸ்' பெறுவதற்கு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டார். இதற்காக கர்நாடகாவின் ஆலுரில் நடந்த 'டி-20' பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றார்.
20 ஓவர் பேட்டிங் செய்து உடல்திறனை நிரூபித்த நிலையில் இம்மாத துவக்கத்தில், பிசியோதெரபிஸ்ட், டிரைனர்கள் 'அட்வைசுடன்' விக்கெட் கீப்பிங் பணியை துவங்கினார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா கூறுகையில்,'' ரிஷாப் நன்றாக பேட்டிங் செய்கிறார். ஐ.பி.எல்., தொடரில் இவரது செயல்பாடு கண்காணிக்கப்படும். விக்கெட் கீப்பிங் பணி செய்யும் பட்சத்தில் உலக கோப்பை அணியில் இடம் பிடிக்கலாம்,'' என்றார்.
தற்போது ரிஷாப் போட்டிக்கான முழு உடற்தகுதி பெற்றுவிட்டார். இவர் வரும் ஐ.பி.எல்., தொடரில் விக்கெட் கீப்பர்-பேட்டராக களமிறங்கலாம் என பி.சி.சி.ஐ., அனுமதி தந்துள்ளது.
இதனால் 14 மாதத்துக்குப் பின் வரும் ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி கேப்டனாக ரிஷாப் மீண்டும் களமிறங்குவது உறுதியானது.
