/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
201 ரன்னுக்கு சுருண்டது இந்தியா: தென் ஆப்ரிக்க அணி அபாரம்
/
201 ரன்னுக்கு சுருண்டது இந்தியா: தென் ஆப்ரிக்க அணி அபாரம்
201 ரன்னுக்கு சுருண்டது இந்தியா: தென் ஆப்ரிக்க அணி அபாரம்
201 ரன்னுக்கு சுருண்டது இந்தியா: தென் ஆப்ரிக்க அணி அபாரம்
UPDATED : நவ 24, 2025 03:22 PM
ADDED : நவ 23, 2025 11:29 PM

கவுகாத்தி: தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்த, இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன் மட்டும் எடுத்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9/0 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (58) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். லோகேஷ் ராகுல் (22), சாய் சுதர்சன் (15) நிலைக்கவில்லை. யான்சென் 'வேகத்தில்' துருவ் ஜுரெல் (0), கேப்டன் ரிஷாப் பன்ட் (7), ரவிந்திர ஜடேஜா (6), நிதிஷ் குமார் ரெட்டி (10) வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் (48) ஓரளவு கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய யான்சென் பந்தில் குல்தீப் யாதவ் (19), பும்ரா (5) அவுட்டாகினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சிராஜ் (2) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் யான்சென் 6, சைமன் ஹார்மர் 3 விக்கெட் கைப்பற்றினர்.
288 ரன் முன்னிலை பெற்றிருந்த தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவுக்கு 'பாலோ-ஆன்' வழங்கவில்லை.
சிக்சர் மன்னன்
ஏழு சிக்சர் அடித்தார் யான்சென். டெஸ்டின் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (7) அடித்த தென் ஆப்ரிக்க வீரர் பட்டியலில் முதலிடத்தை டிவிலியர்ஸ் (எதிர், ஆஸி., 2009, கேப்டவுன்), குயின்டன் டி காக் (எதிர், வெ.இ., கிராஸ் ஐலெட், 2021) உடன் பகிர்ந்து கொண்டார்.
* இந்தியாவில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் யான்சென் முதலிடம் பெற்றார். அடுத்த இடத்தை தலா 6 சிக்சருடன் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (1974, டில்லி), ஆஸ்திரேலியாவின் ஹைடன் (2001, சென்னை) பகிர்ந்து கொண்டுள்ளனர்.
* டெஸ்ட் பேட்டிங் வரிசையில் 9 அல்லது அதற்கு கீழ் களமிறங்கி 90+ ரன்களில் அவுட்டான முதல் தென் ஆப்ரிக்க வீரரானார் யான்சென். ஒட்டுமொத்தமாக 11வது வீரர். இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது வீரர். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 99 ரன்னில் (மொகாலி, 2013) அவுட்டானார்.
என்ன தவறு
இந்திய பவுலர்கள் நேற்று 'டி-20' பாணியில் ரன்னை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசினர். இதனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. குல்தீப் சற்று வேகமாக பந்தை சுழற்றினார். இதை முத்துசாமி, யான்சென் கணித்து ஆடினர். கேப்டன் ரிஷாப் பன்ட் தற்காப்பு முறையிலான 'பீல்டிங்' வியூகம் அமைத்து தவறு செய்தார். சுழலுக்கு சாதகமான களத்தில் மட்டுமே ஜடேஜா (2/94, 28 ஓவர், வாஷிங்டன் சுந்தரின் (0/58, 26 ஓவர்) பந்துவீச்சு எடுபடும் என்பது மீண்டும் நிரூபணமானது.
குல்தீப் யாதவ் கூறுகையில்,''கோல்கட்டா களத்துடன் ஒப்பிடுகையில் கவுகாத்தி ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டது. நேரான சாலையில் பந்துவீசுவது போல மந்தமாக இருந்தது. பவுலர்களுக்கு கடினமானது. சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. வேகப்பந்துவீச்சும் எடுபடவில்லை. பேட்டர்களுக்கு மட்டும் சாதகமாக இருந்தது. வரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும்,''என்றார்.
மூன்றாவது வீரர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், பேட்டிங் வரிசையில் 7 அல்லது அதற்கு கீழ் களமிறங்கி சதம் அடித்த மூன்றாவது தென் ஆப்ரிக்க பேட்டர் ஆனார் முத்துசாமி (7வது இடம்). இதற்கு முன் குயின்டன் டி காக் (7வது இடம், 111, விசாகப்பட்டனம், 2019), குளூஸ்னர் (9வது இடம், 102, கேப்டவுன், 1997) சதம் அடித்திருந்தனர்.
151.1 ஓவர்
இந்திய அணி 151.1 ஓவர் பந்துவீசியது. ஒரு இன்னிங்சில் இந்திய அணியின் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களும் 25 ஓவருக்கு மேல் வீசியது இதுவே முதல் முறை. 2017, ஜனவரிக்கு ஒரு இன்னிங்சில் 150 + ஓவர் வீசியது 3வது முறை. இதற்கு முன் இங்கிலாந்து (190.1 ஓவர், 2021, சென்னை), ஆஸ்திரேலியாவுக்கு (167.2, ஆமதாபாத், 2023) எதிராக அதிக ஓவர் வீசியது.
ஞாபகம் வருதே
இந்திய மண்ணில் கடைசியாக எதிரணி 450+ ரன் எடுத்தும் இந்தியா வென்ற சம்பவம் 2016ல் சென்னை டெஸ்டில் அரங்கேறியது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. பின் கருண் நாயர் 303 ரன் எடுக்க, இந்தியா 759/7 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் ஜடேஜா 7 விக்கெட் சாய்க்க, இந்தியா 75 ரன்னில் வென்றது. கவுகாத்தி செம்மண் ஆடுகளம் முதல் இரு நாள் நன்றாக இருக்கும். பின் வெடிப்புகள் ஏற்பட துவங்கும். இதை பயன்படுத்தி ஜடேஜா மீண்டும் 'மேஜிக்' நிகழ்த்துவாரா...
* எதிரணி முதல் இன்னிங்சில் 489+ ரன் அதிகம் எடுத்து 2003ல் வென்றது. அடிலெய்டில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 556 ரன் எடுத்தது. இந்தியா 4 விக்கெட்டில் வென்றது.
நாகப்பட்டின நாயகன்
தமிழகத்தின் நாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் சேனுரன் முத்துசாமி, 31. தென் ஆப்ரிக்காவின் டர்பனில் பிறந்தார். 2019ல் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். பேட்டிங் 'ஆல்-ரவுண்டரான' இவர், சுழற்பந்துவீச்சிலும் அசத்துவார். 8 டெஸ்டில் 388 ரன், 22 விக்கெட் சாய்த்துள்ளார். டெஸ்டில் முதல் சதம் அடித்தார். தனது பூர்விகமான இந்தியாவுக்கு எதிராக அசத்தி வியக்க வைத்தார்.
முத்துசாமி கூறுகையில்,''எனது கிரிக்கெட் பயணம் வினோதமானது. 2019ல் நடந்த இந்திய தொடரில் அறிமுகமானேன். அப்போது டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்கா இழந்த நிலையில், இனி இந்திய மண்ணில் விளையாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளித்தனர். தற்போது சதம் அடித்தது மகிழ்ச்சி. இந்திய பாரம்பரியத்தை சார்ந்தவன். நாகப்பட்டினத்தில் உள்ள உறவினர்களை சந்திக்க எனது அம்மா செல்வது வழக்கம். நான் இதுவரை அங்கு சென்றதில்லை,''என்றார்.

