/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனலில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்
/
பைனலில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்
ADDED : பிப் 08, 2024 11:15 PM

பெனோனி: ஜூனியர் உலக கோப்பை பைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. பாகிஸ்தானுக்கு எதிரான விறுவிறுப்பான அரையிறுதியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு இந்திய அணி ஏற்கனவே முன்னேறியது. நேற்று பெனோனியில் நடந்த 2வது அரையிறுதியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அசான் அவைஸ் (52), அராபத் மின்ஹாஸ் (52) நம்பிக்கை தந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் 'வேகத்தில்' மிரட்டிய டாம் ஸ்டிராகர் 6 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஹாரி டிக்சன் (50), ஆலிவர் பீக் (49) நம்பிக்கை அளித்தனர். ஆஸ்திரேலிய அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு இணைந்த ராப் மேக்மிலன், கலம் விட்லர் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. முகமது ஜீஷான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மேக்மிலன் வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மேக்மிலன் (19), விட்லர் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நாளை பெனோனியில் நடக்கவுள்ள பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

