ADDED : ஆக 09, 2024 10:32 PM

பிரிஸ்பேன்: இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் 'ஏ' அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்றது. நேற்று இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி, பீல்டிங் தேர்வு செய்தது.
பிரியா ஆறுதல்
இந்திய அணிக்கு ஷ்வேதா (13), பிரியா ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ராகவி 15 ரன் எடுத்தார். சஜனா 9 ரன்னில் அவுட்டானார். சற்று ஆறுதல் தந்த பிரியா, 26 பந்தில் 29 ரன் எடுத்து திரும்பினார்.
'மிடில் ஆர்டரில்' தனுஜா (6), கிரண் (12), உமா (11) என ஒருவரும் நிலைக்கவில்லை.
பின் வரிசையில் சயாலி (4), மேக்னா (1) கைவிட்டனர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன் மட்டும் எடுத்தது. கேப்டன் மின்னு மானி (17), சைகா (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியாவின் கிரேஸ் 4, நிகோலா 3 விக்கெட் சாய்த்தனர்.
வில்சன் அரைசதம்
ஆஸ்திரேலிய அணிக்கு தஹ்லியா வில்சன், கேட் (8) ஜோடி துவக்கம் தந்தது. சார்லி 22 ரன் எடுத்தார். பின் இணைந்த தஹ்லியா வில்சன், கேப்டன் தஹ்லியா மெக்ராத் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அரைசதம் அடித்த வில்சன் (53), தஹ்லியா (47) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றியது.