/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பவுலிங் பயிற்சியாளர் மார்கல் * இந்திய அணிக்காக...
/
பவுலிங் பயிற்சியாளர் மார்கல் * இந்திய அணிக்காக...
ADDED : ஆக 14, 2024 10:27 PM

புதுடில்லி: இந்திய அணி புதிய பவுலிங் பயிற்சியாளராக மார்னே மார்கல் நியமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளராக காம்பிர். மற்ற பயிற்சியாளர்களாக அபிஷேக் (துணை), டென் டசாட்டே (துணை), திலீப் (பீல்டிங்) உள்ளனர். பவுலிங் பயிற்சியாளர் தேர்வு நடந்தது. இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் லட்சுமிபதி பாலாஜி (தமிழகம்), வினய் குமார் என இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருந்தது.
ஆனால் காம்பிர் விருப்பப்படி, தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கல் 39, புதிய பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே ஐ.பி.எல்., தொடரில் லக்னோ அணிக்காக காம்பிருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். தவிர 2023 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்தார்.
செப்., 1 முதல் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வரும் இவர், துலீப் டிராபி போட்டிகளை பார்வையிட உள்ளார். செப். 19ல் சென்னையில் துவங்கும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்து, பயிற்சியாளராக செயல்படுவார். 2027ல் தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை பதவியில் இருப்பார்.
இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் வெளியான செய்தியில்,'' பயிற்சியாளர் பதவிக்குத் தான் கட்டாய நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மற்றபடி, காம்பிர் விருப்பப்படி தான் உதவி பயிற்சியாளர்கள் தேர்வு இருக்கும். மார்கல் ஏற்கனவே அவருடன் பணி செய்துள்ளதால், தேர்வு செய்துள்ளார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு சரியா
தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு கூட்டணி மார்னே மார்கல்-ஸ்டைன். இதில் மார்கல், 86 டெஸ்ட், 117 ஒருநாள், 44 'டி-20' போட்டிகளில் மொத்தம் 544 விக்கெட் சாய்த்துள்ளார். ஐ.பி.எல்., தொடரில் மயங்க் யாதவ், அவேஷ் கான், யாஷ் தாகூர் என புதிய வேகங்களை கொண்டு வந்தார்.
முகமது ஷமி ஓய்வு காலத்தில் உள்ள நிலையில் பும்ராவுடன் இணைந்து செயல்பட சிராஜ் தவிர, வேறு சிறந்த பவுலரை அடையாளம் காண வேண்டும்.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் மார்கல் பயிற்சி, நமது பவுலர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

