/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிட்னி டெஸ்ட்: இந்தியா முன்னிலை
/
சிட்னி டெஸ்ட்: இந்தியா முன்னிலை
UPDATED : ஜன 04, 2025 03:33 PM
ADDED : ஜன 03, 2025 11:43 PM

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 141/6 ரன் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில் இந்தியா, தொடரில் 1--2 என பின்தங்கியுள்ளது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்து, 176 ரன் பின்தங்கி இருந்தது.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. லபுசேன் (2), கான்ஸ்டாஸ் (23), ஹெட் (4), நிலைக்கவில்லை. ஸ்மித் 33 ரன் எடுத்தார். கேரி 21, கம்மின்ஸ் 10 ரன்னில் அவுட்டாக, அறிமுக வீரர் வெப்ஸ்டர் (57) அரைசதம் அடித்து கிளம்பினார். கடைசியில் போலண்ட் (9) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 4 ரன் முன்னிலை பெற்றது.
இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3, பும்ரா 2, நிதிஷ் குமார் 2 விக்கெட் சாய்த்தனர்.
ரிஷாப் அரைசதம்
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (22), ராகுல் (13), சுப்மன் (13), கோலி (6) ஏமாற்றம் தந்தனர். வேகமான ரன் சேர்த்த ரிஷாப் பன்ட், 33 பந்தில் 61 ரன் எடுத்து அவுட்டானார். நிதிஷ் 4 ரன்னில் அவுட்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 141/6 ரன் எடுத்து 145 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா (8), வாஷிங்டன் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.