/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜோ ரூட், புரூக் அரைசதம்: மீண்டது இங்கிலாந்து
/
ஜோ ரூட், புரூக் அரைசதம்: மீண்டது இங்கிலாந்து
ADDED : ஜன 04, 2026 06:56 PM

சிட்னி: சிட்னி டெஸ்டில் ஜோ ரூட், ஹாரி புரூக் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5வது டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
சூப்பர் ஜோடி: இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (16), பென் டக்கெட் (27) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஜேக்கப் பெத்தேல் (10) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 57 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. பின் இணைந்த ஜோ ரூட், ஹாரி புரூக் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். அபாரமாக ஆடிய ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் தனது 67வது அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த புரூக், 63 பந்தில் அரைசதம் எட்டினார். இது, டெஸ்ட் அரங்கில் புரூக்கின் 15வது அரைசதம். இவர்களை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் தடுமாறினர்.
மழையால் பாதிப்பு: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 211/3 ரன் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின், மழை குறுக்கிட முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ரூட் (72), புரூக் (78) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், மைக்கேல் நேசர், ஸ்காட் போலந்து தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். முதல் நாளில் வெறும் 45 ஓவர் மட்டும் வீசப்பட்டன.
கருப்பு பட்டை
சமீபத்தில் (டிச. 15) சிட்னி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனால் சிட்னி கிரிக்கெட் மைதானத்தை சுற்றி, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டி துவங்குவதற்கு முன், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்களை, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். இரு அணி வீரர்களும் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

