ADDED : மார் 01, 2024 10:24 PM

புதுடில்லி: ''உள்ளூர் போட்டியில் பங்கேற்காத வீரர்களின் சம்பள ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது,'' என கபில்தேவ் தெரிவித்தார்.
இந்திய வீரர்களில் சிலர் 'வேர்களை' மறந்துவிடுகின்றனர். சர்வதேச அந்தஸ்து பெற்றவுடன், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க மறுக்கின்றனர். ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட விக்கெட் கீப்பர்/பேட்டர் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் மறுத்தனர். தன்னலத்துடன் செயல்பட்ட இவர்கள், பணம் கொட்டும் ஐ.பி.எல்., தொடருக்கான பயிற்சியை துவக்கினர். ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) புதிய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரையும் நீக்கியது. இவர்களுக்கு ரூ. 1-3 கோடி வருமான இழப்பு ஏற்படும்.
இது குறித்து இந்திய அணிக்கு உலக கோப்பை(1983) பெற்று தந்த ஜாம்பவான் கபில்தேவ் கூறியது:உள்ளூர் போட்டியை பாதுகாக்க பி.சி.சி.ஐ., எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. சர்வதேச போட்டிகளில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததும், உள்ளூர் போட்டியை முன்னணி வீரர்கள் புறக்கணிப்பது கவலைக்குரிய விஷயம். தற்போது சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதால், சிலர் பாதிக்கப்படலாம். இதை கண்டு கொள்ள தேவையில்லை. ஏனெனில் தாய் நாட்டின் நலன் தான் முக்கியம். தேசத்தைவிட பெரிய வீரர்கள் யாரும் இல்லை.
சரியான எச்சிரிக்கை
உள்ளூர் போட்டியில் பங்கேற்க தயங்கும் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., எச்சரிக்கை விடுத்துள்ளது. இனி ரஞ்சி கோப்பை போன்ற நாட்டின் முதல் தர போட்டிகளின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும். சர்வதேச அந்தஸ்து பெற்ற வீரர்கள் தங்களது மாநில அணிகளுக்காக கண்டிப்பாக விளையாட வேண்டும். இதன் மூலம் தங்களை சிறந்த வீரர்களாக உருவாக்கிய மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தலாம். உள்ளூர் வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கலாம்.
ஓய்வூதியம் அதிகரிப்பு
ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் தர கிரிக்கெட்டில் பங்கேற்ற முன்னாள் வீரர்களுக்கு ரூ15,000 டூ ரூ. 30,000, முன்னாள் டெஸ்ட் வீரர்களுக்கு ரூ. 37,500 டூ 60,000, சர்வதேச போட்டியில் பங்கேற்ற முன்னாள் வீராங்கனைகளுக்கு ரூ. 32,500 டூ 52,500, முதல் தர போட்டியில் பங்கேற்ற முன்னாள் வீராங்கனைகளுக்கு ரூ 22,500 டூ 45,000 என ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

