ADDED : ஏப் 24, 2026 11:19 PM

மும்பை: வான்கடே மைதானத்தில் வாணவேடிக்கை காட்டிய 'சேட்டன்' சஞ்சு சாம்சன், சதம் விளாசினார். மும்பை பந்துவீச்சை சிதறடித்த இவர், சென்னைக்கு இன்னொரு வெற்றி தேடித் தந்தார். சதம் அடித்த சஞ்சுவை மும்பை வீரர்களான பும்ரா, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா தட்டிக் கொடுத்து பாராட்டியது நெகிழ்ச்சியான தருணம். லீக் தொடரில் நேருக்குநேர் மோதும் இவர்கள், சமீபத்தில் ஒன்றாக இணைந்து இந்திய அணிக்கு 'டி-20' உலக கோப்பை வென்று தந்தனர்.
சஞ்சு சாம்சன் கூறுகையில்,''கடந்த லீக் போட்டியில் ஆரம்பத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை. மறுபக்கம் விக்கெட்டுகள் விரைவாக சரிந்ததால், நிலைத்து நின்று விளையாட முடிவு செய்தேன். போட்டியின் சூழல் தான், ஆட்டத்தை தீர்மானிக்கிறது. வான்கடே அரங்கில் சதம் அடித்தது மகிழ்ச்சியான அனுபவம்,''என்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ளே கூறுகையில்,''சென்னை அணியின் வெற்றிநடையில் துவக்க வீரர்களின் பங்கு மகத்தானது. கடந்த சில சீசனில் துவக்கத்தில் தடுமாறியது. இம்முறை சாம்சன் வலுவான துவக்கம் தருகிறார். 7 போட்டியில் இரண்டு சதம் அடித்துள்ளார். அணியை சரியான பாதையில் அழைத்து செல்கிறார்,''என்றார்.
முகம் மூடும் ரகசியம்
மும்பை: மும்பையை 'சுழலில்' திணறடித்தனர் சென்னை அணியின் ஸ்பின் 'இரட்டையர்களான' அகீல் ஹொசைன் (4 விக்.,), நுார் அகமது (2 விக்.,). ஒவ்வொரு முறை விக்கெட் வீழ்த்தும் போதும், கையால் முகத்தை மறைத்து மகிழ்ந்தார் அகீல். இதே 'ஸ்டைலை' நுார் அகமது பின்பற்றுகிறார். இவர்களது 'மாஸ்க்' கொண்டாட்டம் இணையத்தில் 'வைரலாகி' வருகிறது. சாம்சன் உள்ளிட்ட சக வீரர்களும் 'ஜாலி'யாக முகத்தை மறைக்கின்றனர்.
அகீல் ஹொசைன் கூறுகையில்,''கால்பந்து வீரர்கள் மத்தியில் 'மாஸ்க்' கொண்டாட்டம் சகஜம். இது போன்று நானும் நுாரும் விக்கெட் வீழ்த்தும் தருணங்களில் 'மாஸ்க்' அணிந்தது போல கொண்டாடுகிறோம். இதன் பின்னணியில் விசேஷமாக ஒன்றுமில்லை,''என்றார்.
சவுத்ரிக்கு சமர்ப்பணம்
மும்பை: சென்னை பவுலர் முகேஷ் சவுத்ரியின் தாயார் உடல்நலக்குறைவால் ராஜஸ்தானில் காலமானார். இறுதிச்சடங்கில் பங்கேற்ற இவர், அணியின் நலன் கருதி இரண்டே நாளில் திரும்பினார். மும்பைக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு உதவினார்.
சென்னை கேப்டன் ருதுராஜ் கூறுகையில்,''கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு, மனவலிமையுடன் களமிறங்கினார் சவுத்ரி. இவருக்கு ஆதரவாக இருப்போம். மும்பைக்கு எதிரான வெற்றியை இவருக்கு சமர்ப்பிக்கிறோம்,''என்றார்.
சான்ட்னர்-ஷர்துல் சர்ச்சை
மும்பை: பும்ரா பந்தை (16.5 ஓவர்) சென்னை வீரர் கார்த்திக் சர்மா துாக்கி அடித்தார். எல்லையில் 'டைவ்' அடித்து சான்ட்னர் பிடித்தார். அப்போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட, 'பெவிலியன்' திரும்பினார். 'பேட்டிங்' செய்ய வரவில்லை. இவருக்கு பதில் 'கன்கஷன்' மாற்று வீரர் விதிமுறைப்படி ஷர்துல் தாகூர் களமிறக்கப்பட்டார். தலையில் காயம் ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படும் வீரருக்கு தான் இந்த விதிமுறை பொருந்தும். ஆனால், சான்ட்னருக்கு தோள்பட்டையில் தான் காயம் ஏற்பட்டிருந்தது.
மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயர்வர்தனா கூறுகையில்,''பந்தை பிடிக்க கீழே விழுந்த போது சான்ட்னருக்கு முதலில் தலை, கழுத்தில் காயம் ஏற்பட்டது. தோள்பட்டை பகுதியிலும் காயம் அடைந்தார். இதற்காக 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. 'பேட்டிங்' செய்யும் நிலையில் இல்லாததால் 'கன்கஷன்' மாற்று வீரராக ஷர்துலை களமிறக்க முடிவு செய்தோம். இதற்கு 'மேட்ச் ரெப்ரி', அம்பயர்கள் அனுமதி அளித்தனர்,''என்றார்.
