ADDED : ஆக 21, 2025 10:13 PM

மும்பை: மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரகானே விலகினார்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே 37. உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். இதுவரை 201 முதல் தர போட்டியில் (14,000 ரன், 41 சதம், 59 அரைசதம்) பங்கேற்றுள்ளார். கடந்த 2018ல் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரகானே. இவரது தலைமையிலான மும்பை அணி, தியோதர் டிராபி (2018-19), சையது முஷ்தாக் அலி டிராபி (2022-23), ரஞ்சி கோப்பை (2023-24), இரானி கோப்பை (2024-25) வென்றது.
வரும் அக். 15ல் ரஞ்சி கோப்பை 91வது சீசன் (2025-26) துவங்குகிறது. மும்பை அணி, தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியை சந்திக்கிறது. இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரகானே விலகினார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில், ''மும்பை அணியை வழிநடத்தி, கோப்பை வென்று தந்த தருணம் என்றும் மறக்க முடியாதது. இதனை கவுரவமாக கருதுகிறேன். புதிய சீசன் துவங்கவுள்ள நிலையில் அணிக்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. எனவே கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகுகிறேன். பேட்டராக அணியில் நீடிப்பேன். புதிய கேப்டனுக்கு பக்கபலமாக இருந்து, நிறைய கோப்பை வென்று தர உதவுவேன்,'' என்றார்.
ரகானே விலகிய நிலையில் மும்பை அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ஷர்துல் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

