ADDED : ஏப் 13, 2026 11:15 PM

மும்பை: வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், பெங்களூரு அணி, மும்பையை வீழ்த்தியது. இதில் பெங்களூரு அணியின் டிம் டேவிட், 18, 20வது ஓவரின் முடிவில் அம்பயர்களிடம் இருந்த பந்தை பரிசோதித்து பார்த்தார். அம்பயர்கள் திரும்ப, திரும்ப கேட்டும் பந்தை வழங்காமல் தாமதம் செய்தார். இப்படி ஒழுங்கீனமாக நடந்த குற்றத்திற்காக டிம் டேவிட்டிற்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி, போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இப்போட்டியில் மும்பை அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. இதற்காக கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு, ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
'ரோ-கோ' சோகம் தீருமா
மும்பை: சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, 38, கோலி, 37, (சுருக்கமாக ரோ-கோ) காயத்தால் தவிக்கின்றனர். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் ரோகித் சர்மா (13 பந்தில் 19 ரன்) தொடை பிடிப்பு காரணமாக, 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். இவருக்கு 'ஸ்கேன்' பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் முடிவை பொறுத்து அடுத்த போட்டியில் பங்கேற்பது தெரிய வரும்.
பெங்களூரு தரப்பில் கோலி, 38 பந்தில் 50 ரன் எடுத்தார். இன்னும் அதிக ரன் எடுக்காத விரக்தியில், 'டக் அவுட்' பகுதியில் 'ஹெல்மெட்டை' துாக்கி எறிந்தார். இவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். கோலிக்கு பதிலாக ஜேக்கப் பெத்தல் 'பீல்டிங்' செய்தார்.
சக வீரர் குர்ணால் பாண்ட்யா கூறுகையில், ''கோலி நலமாக உள்ளார். இவரது காயத்தின் தன்மை பற்றி இன்னும் 'பிசியோதெரபிஸ்டிடம்' பேசவில்லை. கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,'' என்றார்.
தோனியை தொடர்ந்து 'ரோ-கோ'வும் காயத்தால் தவிப்பது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அலைபேசி சர்ச்சைக்கு 'நோட்டீஸ்'
கவுகாத்தி: அலைபேசி பயன்படுத்திய ராஜஸ்தான் அணி மானேஜர் ரோமி பிந்தருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச், 10ல் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில், மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதியில் (டக் அவுட்) ராஜஸ்தான் அணி மானேஜர் ரோமி பிந்தர் அலைபேசி பயன்படுத்தியது அம்பலமானது. அருகில் வைபவ் சூர்யவன்ஷி இருந்தார். இது, விதிமுறையை மீறிய செயல் என்பதால், பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு அமைப்பினர் விசாரிக்கின்றனர். 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கம்படி ரோமிக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.
ராஜஸ்தான் அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''ரோமி பிந்தருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மாதம் நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றார். மருத்துவ அவசர உதவிக்காக மட்டுமே அலைபேசி வைத்திருந்தார். அழைப்பு எதுவும் மேற்கொள்ளவில்லை. தவறு செய்யும் நோக்கம் இல்லை. தனது நியாயமான விளக்கத்தை அளிப்பார்,'' என்றார்.
