உலக கோப்பை அணியில் ரிஷாப் * பி.சி.சி.ஐ., நம்பிக்கை
உலக கோப்பை அணியில் ரிஷாப் * பி.சி.சி.ஐ., நம்பிக்கை
ADDED : மார் 11, 2024 10:55 PM

புதுடில்லி: ''ரிஷாப் பன்ட் விக்கெட் கீப்பிங் செய்தால், வரும் 'டி-20' உலக கோப்பை அணியில் களமிறங்கலாம்,'' என பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 26. கடந்த 2022, டிச. 30ல் டில்லியில் இவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. வலது முழங்காலில் தசை நார் கிழிந்தது. கணுக்கால், மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்த இவர், இரண்டு ஆண்டுக்குப் பின் களமிறங்க காத்திருக்கிறார். வரும் ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் டில்லி அணிக்காக பங்கேற்க உள்ளார்.
இவர் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா கூறியது:
ரிஷாப் பன்ட் நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கிலும் ஈடுபடுகிறார். இவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டார் என விரைவில் அறிவிக்க உள்ளோம். ஒருவேளை உலக கோப்பை தொடரில் விளையாடினால் இந்தியாவுக்கு நல்ல விஷயம் தான்.
ஏனெனில் ரிஷாப் இந்தியாவின் முக்கிய வீரராக திகழ்கிறார். ஐ.பி.எல்., தொடரில் எப்படி விளையாட உள்ளார் என பொறுத்திருந்து பார்க்கலாம். விக்கெட் கீப்பிங் பணி செய்யும் பட்சத்தில் உலக கோப்பை அணியில் இடம் பிடிக்கலாம்.
வருவாரா ஷமி
வேகப்பந்து வீச்சாளர் ஷமியை பொறுத்தவரை லண்டனில் ஆப்பரேஷன் முடிந்து, இந்தியா திரும்பியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் சொந்தமண்ணில் நடக்கவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இடம் பெற வாய்ப்புள்ளது. லோகேஷ் ராகுலுக்கு, லண்டனில் ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை தரப்பட்டது. தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 'பிட்னஸ்' சான்றிதழ் கிடைத்த பின், ஐ.பி.எல்., லக்னோ அணியில் இணைவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
