ADDED : மே 18, 2026 09:15 PM

புதுடில்லி: 'ஆர்.டி.ஐ., சட்டத்தின் கீழ் பி.சி.சி.ஐ., வராது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ல், இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) பொது நிறுவனம் என மத்திய தகவல் ஆணையம் (சி.ஐ.சி.,) அறிவித்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ் கொண்டு வர, அதிகாரிகளை நியமிக்க சி.ஐ.சி., உத்தரவிட்டது.
நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ மனுக்களை பெற்று, பதில் அளிக்க வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பி.சி.சி.ஐ., சார்பில் சென்னை, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பி.சி.சி.ஐ.,யின் மனுவை மீண்டும் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க சி.ஐ.சி.,க்கு உத்தரவிட்டது. இந்நிலையில் 2018ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பி.சி.சி.ஐ., வராது என சி.ஐ.சி., தெரிவித்தது.
தவிர, நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் ஆலோசனைக்கு மட்டுமே. அவை ஆர்.டி.ஐ., சட்டத்தின் பிரிவில் உள்ள சட்ட விதிகளை மீற முடியாது என, சி.ஐ.சி., தனது உத்தரவில் கூறியுள்ளது.
